பதிவு செய்த நாள்
05 டிச2016
01:26
மாறி வரும் பொருளாதார சூழலில், வர்த்தக நிறுவனங்களின் தேவைகளும் மாறுவதால், வேலைவாய்ப்புகளை நாடுபவர்களும், அதற்கேற்ற திறன்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, தகவல் தொழில்நுட்பத் துறை, அதிக வேலைவாய்ப்பு கொண்ட துறையாக கருதப்பட்டது. இத்துறை, அதிக ஊதியம் தரும் துறையாகவும் அமைந்தது. ஆனால், தற்போது மாறி வரும் பொருளாதார சூழலில், தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களே, வளர்ச்சிக்கான சவாலை எதிர் நோக்கிஉள்ளன. மேலும், தானியங்கிமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால், இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் என, அஞ்சப்படுகிறது.
அண்மையில், மனிதவளத் துறை வல்லுனரும், முதலீட்டாளருமான மோகன்தாஸ் பை, ‘தானியங்கிமயத்தால், 2025 ஆண்டு வாக்கில், 20 கோடி அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம்’ என, கூறியிருந்தார். ஏற்கனவே, பல்வேறு ஆய்வு அறிக்கைகளும், வருங்காலத்தில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் எச்சரித்துள்ளன.
அதிக ஊதியம்!
மாறி வரும் பொருளாதார சூழலில், பிரகாசமான வாய்ப்புகளை கொண்ட துறைகளும் பல இருக்கின்றன. சரியான தொழில் துறையை தேர்வு செய்து திறன் பெற்றால், அதிக ஊதியம் பெறும் வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இதனடிப்படையில், 2017ல், அதிக ஊதியம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளை, பிஸ்னஸ் இன்சைடர் இணையதளம் பட்டியலிட்டு உள்ளது. மார்க்கெட்டிங் துறை பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, வளர்ச்சிக்கான புதிய பாதை காட்டும், குரோத் ஹேக்கர் எனும் பணி வாய்ப்பு முக்கியமாகிறது.
பல்வேறு மார்க்கெட்டிங் சேனல்கள் மற்றும் பொருட்கள் வடிவமைப்பு வழிகளில், வேகமாக பரிசோதனைகளை முயற்சித்து, நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவக்கூடிய, செயல்திறன் வாய்ந்த வழிகளை கண்டறியும் பணியாக இது அமைகிறது. இளங்கலை பட்டம், இதற்கான தகுதியாக கருதப்படுகிறது. இந்த பணியில் மாதம், 60 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெற வாய்ப்புள்ளது.
இதே போல, டெக்னிக்கல் ரைட்டர் எனப்படும், தொழில்நுட்ப எழுத்தாளர்கள் பணிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பம் சார்ந்த உள்ளடக்கத்தை உருவாக்கக் கூடியதாக, இந்த பணி அமைகிறது. தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களில், இதற்கான வேலைவாய்ப்பு உள்ளது; பட்டப்படிப்பு போதுமானது. ஆங்கிலத்தில் எழுத்தாற்றல் மற்றும் தொழில்நுட்ப புரிதல் அவசியம். மாதம், 50 ஆயிரம் ரூபாய் முதல், 1.7 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்புள்ளது.
சமூக ஊடக மேலாளர்
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் விளம்பர உத்திக்காவும், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும், சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. எனவே, நிறுவனங் களில், சமூக ஊடக மேலாளர் எனும் பதவிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இத்துறையில், 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், இந்த பதவிக்கு பரிசீலிக்கப்படுகின்றனர். நிறுவன பிராண்டின் மதிப்பை சமூக ஊடகங்களில் நிர்வகிப்பது, இந்த பணியில் உள்ளவர்களின் பொறுப்பாக அமைகிறது; பட்டப்படிப்பே போதுமானது. சமூக ஊடகத் துறையில் அனுபவம் தேவை. மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இதே போல, உறவுகள் தொடர்பான பிரச்னைகள் தீர ஆலோசனை அளிக்கும். ரிலேஷன்ஷிப் தெரபிஸ்ட் எனும் பணியும் புதிய வேலைவாய்ப்பாக உருவாகி வருகிறது.
நவீன வாழ்க்கை நெருக்கடி காரணமாக, மன அழுத்தம் அதிகரித்து, இளம் தம்பதியர் வாழ்க்கையில், பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில், உறவுகள் தொடர்பான ஆலோசனைக்கான தேவையும் அதிகரித்துஉள்ளதாக, உளவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். மாதம், ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறும் வாய்ப்புள்ளது. தேடியந்திரங்களில் முன்னிலை பெறுவது தொடர்பான உத்திகளை வகுத்து கொடுக்கும், எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் வேலையும் பிரகாசமானதாக அமைகிறது.
மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ எனும், புதுயுக நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்துறைக்கான தேவையும் அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.
சேமிப்பின் முழு பலனை பெற!
நம்மில் பலரும் சேமிப்பின் அருமையை உணர்ந்திருக்கிறோம். அதன் படி சேமிக்கவும் செய்கிறோம். ஆனால், சேமித்தால் மட்டும் போதாது. சேமிப்பின் முழு பலனை பெற வேண்டும் என்றால், சேமித்த பணத்தை என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம். உதாரணத்திற்கு பலரும் பணத்தை சேமிக்க சிக்கனத்தை கடைபிடிக்கலாம்: வீண் செலவுகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் இவ்வாறு மிச்சம் செய்யும் பணத்தை என்ன செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும்.
சேமிக்கப்பட்ட தொகை, வேறு ஒன்றுக்காக செலவு செய்யப்படும் நிலை இருந்தால், அதனால் பயன் இல்லை. எனவே, செலவை மிச்சம் செய்து, சேமிக்கும் பணத்தை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை உரிய முறையில் முதலீடு செய்ய வேண்டும். குறைந்த பட்சம் சேமிப்பு கணக்கிலாவது போட்டு வைக்க வேண்டும். பின்னர் பொருத்தமான முதலீட்டு சாதனத்திற்கு மாற்றிவிட வேண்டும். அப்போது தான் சேமிப்பு வளரும்.
நெருக்கடி கற்றுத்தரும் நிதி பாடங்கள்
ரூபாய் நோட்டு செல்லாது, என்ற அறிவிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தற்காலிகமானது என்றாலும், இந்த நெருக்கடியை சமாளிக்கும் அனுபவம், சில முக்கிய பாடங்களை கற்றுத்தந்துள்ளது. இந்த பாடங்கள், நிதி வாழ்க்கையில் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்றும், நிதி திட்டமிடலில் பின்பற்றப்பட வேண்டியவை என்றும், நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்:
பட்ஜெட் முக்கியம்
ரூபாய் நோட்டு நெருக்கடி, பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் அவசியத்தை புரிய வைத்திருக்கும். நிதி திட்டமிடலில் முதலில் சொல்லப்படுவதும் இது தான். பணப்புழக்கம் குறைந்துள்ளதால், மிகவும் அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற செலவுகளை பின் பார்த்துக் கொள்ளலாம் என தள்ளி வைத்து, தேவையில்லாத செலவுகளை முற்றிலும் தவிர்த்திருப்போம். நிலைமை சரியானதும், இதை தளர்த்திக் கொள்ளலாம் என்றாலும், முதலில், சேமிப்புக்கு பணம் ஒதுக்கி விட்டு, செலவுகளையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
பீதி வேண்டாம்
நிதி நெருக்கடி ஏற்படும் போது பயமும், பதற்றமும் உண்டாவது இயல்பு தான். ஆனால், அதற்காக முதலீட்டு உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றில்லை. ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்கு பின், பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடு தான். ஆனால், முதலீடு முடிவு என்பது ஒருவரின் வயது, நிதி நிலை, நிதி இலக்குகள் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். திடீர் நிகழ்வுகளால் ஏற்படும் உணர்வுகள், நிதி முடிவுகளை தீர்மானிக்க கூடாது.
சேமிப்புக்கு பின்!
சேமிப்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், சேமிக்கும் பணத்தை வீட்டிலேயே வைத்துக்கொள்வதை விட சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும். அவசரத் தேவைக்காக ரொக்கம் வைத்திருப்பதில் தவறில்லை. ஆனால், இந்த பணத்தை கூட குறுகிய கால முதலீடு திட்டங்களில் போட்டு வைக்கலாம். லிக்விட் பண்ட், சேமிப்பு கணக்குடன் இணைந்த வைப்பு நிதி என, பல வழிகள் உள்ளன. வீட்டிலேயே பணத்தை வைத்திருக்கும் போது, அது மேலும் வளர்ந்து, பலன் தர வாய்ப்பில்லாமல் போகும்.
மாற்றம் அவசியம்
தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப, நாமும் மாறுவது அவசியம். அரசும், வங்கிகளும் டிஜிட்டல் வசதி பற்றி, அடிக்கடி கூறி வந்தாலும், பலரும் அதை பொருட்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நெருக்கடி சூழலில் தான், பில் செலுத்தவும், பண வர்த்தனை செய்யவும் டிஜிட்டல் வழிமுறைகள் எந்த அளவு பயனுள்ளவை என புரிந்துள்ளது. எனவே, எப்போதுமே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்து கொள்வது அவசியம். டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகள் நேரத்தையும் மிச்சமாக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|