பதிவு செய்த நாள்
25 டிச2016
00:50
மும்பை:‘புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஓட்டல்களில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்’ என, ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் மேற்கு இந்திய பிரிவு தலைவர், திலிப் தத்வானி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் விபரம்:ஆண்டுதோறும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள முக்கிய ஓட்டல்களில், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளுக்கு, இளம் தலைமுறையினரிடையே ஆதரவு அதிகம் உள்ளது. புத்தாண்டையொட்டி, அழகிப் போட்டி, ஆடை அலங்காரப் போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சிறப்பு விருந்தில், ருசியான விசேஷ உணவு வகைகளும் பரிமாறப்படும். இவற்றால், ஓட்டல்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இந்தாண்டு, மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால், கடந்த ஒன்றரை மாதங்களாக, ஓட்டல் தொழில் படுத்துவிட்டது.
ஓட்டல்களுக்கு வரும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால், ஓட்டல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வழக்கமாக, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றையொட்டி நடைபெறும் கேளிக்கை, இசை, விருந்து நிகழ்ச்சிகள் மூலம், ஓட்டல்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, இந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், வழக்கம் போல் களைகட்டுமா என, தெரியவில்லை.
ஆகவே, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க, ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை நீட்டித்து, அனுமதி வழங்க வேண்டும். மேலும், ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உரிமத்தை, விரைவாக வழங்க வேண்டும். இதன் மூலம், நிகழ்ச்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தவும், அதிகளவில் வாடிக்கையாளர்களை கவரவும் முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|