பதிவு செய்த நாள்
26 டிச2016
23:41
புதுடில்லி : ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வங்கிகள், தகுதியுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சுலபமாக கடன் வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது’ என, இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
இக்கூட்டமைப்பின் டைரக்டர், ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வங்கிகளில், ‘டிபாசிட்’ அதிகரித்துள்ளது. இதன் மூலம், சிறு, நடுத்தர நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, அதிகளவில், வங்கிகள் கடன் வழங்க முடியும். அதே சமயம், வங்கிகள், வாராக்கடன் பிரச்னையும் வராமல், அவற்றின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு, நிறுவனம், நிறுவனர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், வங்கிகள் அறிவது அவசியம்.
மத்திய அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் மின்னணு மயமாக்கி வருவதால், இத்தகவல்களை சுலபமாக பெறலாம். ஒரு நிறுவனம் குறித்து, அரசின் பல்வேறு துறைகளில் பதிவு செய்யப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, அந்நிறுவனத்தின் கடன் தகுதி குறித்தும், அக்கடனை உரிய முறையில் திரும்பச் செலுத்தும் தகுதி, நிறுவனருக்கு உள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்பு சட்டத்தின் உட்பிரிவின் கீழ், ஒரு நிறுவனத்தின், ‘பான்’ எனப்படும், வருமான வரி கணக்கு எண்ணை பெறலாம். அது போல, ‘டின், சின்’ எனப்படும், வரி செலுத்துவோர் அடையாள எண் மற்றும் செலுத்தும் வரிக்கான பதிவு எண் போன்றவற்றை பெற்று, அனைத்து விபரங்களையும் வங்கிகள் அறியலாம். அது போல, ஒரு நிறுவனத்தின் நிதி நிலவரத்தை, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம் இருந்து பெறப்படும் ஆண்டறிக்கை மூலம் அறியலாம்; வருமான வரித்துறையில், படிவம் 26 ஏ.எஸ்.,–ல் அளிக்கப்பட்ட வருவாய் விபரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குறித்த தகவல்களையும், அவர்களுக்கு செலுத்தப்படும் சந்தா விபரங்களையும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் இருந்து வங்கிகள் பெறலாம். இத்தகைய, எண்ணற்ற, ஒருங்கிணைந்த தகவல் தொகுப்புகளின் அடிப்படையில், ஒரு நிறுவனத்தின் செயல் திறனை எடைபோட்டு, கடனுதவி வழங்குவது குறித்து, வங்கிகள் சுலபமாக முடிவெடுக்கலாம். இத்தகைய வசதியால், ஒரு நிறுவனம் அளிக்கும் தகவலின் நம்பகத்தன்மையை, வங்கிகள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்; மோசடி தகவல்களை தரும் நிறுவனத்தின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தற்போது வங்கிகளிடம் பெருந்தொகை குவிந்துள்ளது. அதனால், அவை, குறைந்த வட்டியில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால், வங்கித் துறையும், தொழில் துறையும், ஒரு சேர வளர்ச்சி காணும் சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|