பதிவு செய்த நாள்
12 ஜன2017
00:00
புதுடில்லி : மத்திய அரசு, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை, 42 சதவீதம் சரிவடைந்து உள்ளது என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
வலைதள நிறுவனமான, இந்தியன் புளு புக், புதிய கார்களின் வருகை, பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை விலை உட்பட, பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், பண மதிப்பு நீக்கத்தால், பழைய கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:பயன்படுத்தப்பட்ட கார்களின் பெரும்பான்மை விற்பனை, ரொக்கத்தில் தான் நடைபெறுகிறது. இந்நிலையில், 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானதால், பழைய கார்களின் விற்பனை, 42 சதவீதம் சரிவடைந்தது.பணத் தட்டுப்பாடு காரணமாக, பயன்படுத்தப்பட்ட கார் வாங்க நினைத்த வாடிக்கையாளர்களில், 13 சதவீதம் பேர், தங்கள் திட்டத்தை தள்ளி வைத்து விட்டனர் என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களை விட, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் தான், பழைய கார் விற்பனை சரிவடைந்து உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், பயன்படுத்தப்பட்ட கார்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. அதன்பின், விலை வீழ்ச்சியடைய துவங்கியது. டிசம்பரில், பழைய கார்களின் விலை, 15 சதவீதம் சரிவடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு, மேலும் வலு சேர்க்கும் விதத்தில், பல நிறுவனங்கள், புத்தாண்டில், புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தன. இத்தகைய சூழலிலும், பழைய கார் சந்தையின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணிகள், வலுவாகவே உள்ளன. அதனால், வரும் மாதங்களில், பயன்படுத்தப்பட்ட கார் சந்தை, வீழ்ச்சியில் இருந்து எழுச்சி காணும் எனலாம். இச்சந்தை, மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது.
அமைப்பு சார்ந்த பழைய கார் சந்தையின் வளர்ச்சி, தற்போது, 12 சதவீதம் என்றளவில் உள்ளது. நீண்ட கால அடிப்படையில், இந்த வளர்ச்சி, 20 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.பணத் தட்டுப்பாடு பிரச்னை குறைந்துள்ளதாலும், மின்னணு பணப் பரிமாற்ற நடைமுறைக்கு, ஏராளமானோர் மாறி வருவதாலும், பழைய கார் விற்பனை மெல்ல உயரத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு, நவம்பருக்கு முன் மேற்கொள்ளப்பட்ட, எண்ணிக்கை அடிப்படையிலான கார் விற்பனையில், தற்போது, 87 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இது, வரும் மாதங்களில், மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|