பதிவு செய்த நாள்
11 பிப்2017
00:00
புதுடில்லி : ‘‘வீடுகளில் சேமிக்கப்படும் பணத்தை, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்காக, விரைவில், நிதி ஆலோசனை குழு அமைக்கப்படும்,’’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’யின் தலைவர், யு.கே.சின்ஹா தெரிவித்து உள்ளார்.
இந்திய குடும்பங்களில், குறிப்பாக இல்லத்தரசிகளிடம், சேமிக்கும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, வட்டி வருவாய் ஈட்டாமல், அவசர தேவைகளுக்கு உதவும் என்ற நோக்கத்தில், வீடுகளில் பணம் சேமிக்கப்படுகிறது. பலர், வங்கி நடைமுறைகளுக்கு அஞ்சி, வீடுகளில் பணத்தை சேமிக்கின்றனர். இத்தகைய சேமிப்புகளை, எளிய நடைமுறைகள் மூலம் பங்குச் சந்தைகளுக்கு ஈர்க்க, ‘செபி’ திட்டமிட்டு உள்ளது. இதனால், முடங்கிக் கிடக்கும் சேமிப்பு மூலம், குடும்பங்களுக்கு வருவாய் கிடைக்கும் என்பதுடன், நாட்டின் பொருளாதாரமும், வளர்ச்சி பெறும் என, செபி கருதுகிறது.
இது குறித்து, டில்லியில் நடைபெற்ற, 11வது, ‘டிஜிட்டல் இந்தியா’ மாநாட்டில், யு.கே.சின்ஹா பேசியதாவது:குடும்ப சேமிப்புகளை, பங்குச் சந்தைகளுக்கு ஈர்ப்பதன் மூலம், வீடும், நாடும் வளர்ச்சி பெறும். நாட்டின் பொருளாதாரம் நன்கு உள்ளது. பங்குச் சந்தையிலும், கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் உள்ளன. இத்தகைய சூழலில், பங்குச் சந்தைகளில் குடும்ப சேமிப்புகளின் பங்களிப்பு, மிகச் சொற்பமாகவே உள்ளதை ஏற்க முடியாது. மக்கள், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர்; ஆனால், ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்வோம்’ போன்ற சில நடைமுறை சிரமங்களால், முதலீடு செய்ய தயங்குகின்றனர்.
அதனால், சுலபமான நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆராய, விரைவில் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், நிதி வல்லுனர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இல்ல சேமிப்புகளை பங்குச் சந்தைக்கு ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை, செபி எடுக்கும்.
சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள் வெளியிடும் பங்கு ரசீதுகளை, பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவது தொடர்பான, புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் நிதியாண்டில், புதிய விதிமுறைகள் வெளியிடப்படும். இந்தியாவில், ‘கிரவுட் பண்டு’ எனப்படும், கூட்டு நிதி சேகரிப்பு மூலம், பொதுமக்களிடம் பணம் பெற்று, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது அதிகரித்து வருகிறது. இத்திட்டத்தை முறைப்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை, கருத்து கேட்புக்காக, செபி வெளியிட்டது. ஆனால், அதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாக, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|