பதிவு செய்த நாள்
12 பிப்2017
02:48
புதுடில்லி : ‘இந்தியாவின் அடையாள வாகனம்’ என்ற சிறப்புடன் திகழ்ந்து வந்த, ‘அம்பாசடர்’ காரின் பிராண்டு உரிமையை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பியூஜியாட் எஸ்.ஏ., குழுமம், 80 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சி.கே.பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, இந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு, கோல்கட்டாவின், உட்டபரா நகரில், கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.
இங்கு, 1958ல், முதன்முதலாக, அம்பாசடர் கார் தயாரிக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கார் என்ற சிறப்புடன், அனைத்து மாநில அரசு துறைகளின் பயன்பாட்டிற்கான, அதிகாரபூர்வ கார் என்ற பெருமையையும், அம்பாசடர் பெற்றது.
இந்நிலையில், மத்திய அரசின், மாருதி உத்யோக் நிறுவனம், ஜப்பானின் சுசூகி நிறுவனத்துடன் இணைந்து, 1983ல், ‘மாருதி’ கார்களை அறிமுகப்படுத்தியது. குறைந்த விலை, சிக்கனமான எரிபொருள் செலவு போன்றவற்றால், மாருதிக்கு மவுசு பெருகியது.
இதையடுத்து, 1991ல், அறிமுகமான தாராளமயமாக்கல் கொள்கையால், இந்தியாவில், பன்னாட்டு கார்களின் வரவு அதிகரித்தது.
இத்தகைய போட்டிகளை சமாளிக்க முடியாமல், அம்பாசடர் கார் விற்பனை சரிவடையத் துவங்கியது. அதனால், சந்தையை தக்க வைத்துக் கொள்ள, அம்பாசடர் கார் வடிவம் மேம்படுத்தப்பட்டு, நவீன மயமாக்கப்பட்டது.
இருந்த போதிலும், கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியாமல், 2014ல், அம்பாசடர் கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, இந்த கார் தயாரிப்பு, பிராண்டு உரிமம் ஆகியவற்றை, பிரான்சின், பியூஜியாட் எஸ்.ஏ., குழுமம் வாங்கியுள்ளது.
இக்குழுமம், சி.கே.பிர்லா குழுமத்துடன் இணைந்து, தமிழகத்தில், 700 கோடி ரூபாய் முதலீட்டில், கார் மற்றும் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட உள்ளது; இதற்கான ஒப்பந்தம், கடந்த மாதம் கையெழுத்தாகி உள்ளது.
இதன்படி அமைய உள்ள, கூட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஆண்டுக்கு, 1 லட்சம் கார்கள் தயாரிக்கவும், இன்ஜின்களை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பியூஜியாட்டின் விடாமுயற்சிபியூஜியாட் எஸ்.ஏ., குழுமம், ‘பியூஜியாட், சிட்ரன், டி.எஸ்.,’ என்ற மூன்று பிராண்டுகளில், நவீன கார்களை விற்பனை செய்து வருகிறது. இக்குழுமம், பிரீமியர் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 1995ல், முதன்முதலாக, இந்தியாவில், ‘பியூஜியாட் – 309’ கார் விற்பனையை துவக்கியது.
அதன்பின், 2001ல், கூட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறியது. 2011ல், மீண்டும், இந்தியாவில் கால் பதிக்கப் போவதாக அறிவித்தது. இது தொடர்பாக, தமிழகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநில அரசுகளுடன், நிலம் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சு நடத்தியது. எனினும், இத்திட்டம் கைக்கூடவில்லை. தற்போது, மூன்றாவது முயற்சியாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|