பதிவு செய்த நாள்
13 பிப்2017
05:11
குறைந்த வட்டி விகித சூழலில், பாதுகாப்பான பலனை விரும்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் 8 சதவீத அரசு சேமிப்பு பத்திரங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பிட்ட வட்டி விகிதத்தை உறுதி அளிக்கும் இந்த சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வது பற்றி ஒரு பார்வை: எட்டு சதவீத அரசு சேமிப்பு பத்திரங்கள், 2003ம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டன. இவற்றின் முதிர்ச்சி காலம் ஆறு ஆண்டுகளாகும். குறிப்பிட்ட வினியோக அமைப்புகள் மூலம் இவற்றில் ஆண்டு முழுவதும் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்இந்த பத்திரங்களும் மற்ற அரசு பத்திரங்கள் போன்றவை தான். ஆனால், இவை குறிப்பிட்ட வட்டி விகிதம் கொண்டவை. வட்டி விகிதம், 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அரையாண்டு அடிப்படையில் அல்லது கூட்டு வட்டி முறையில் முதிர்வு காலத்தில் பெற்றுக்கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கி, அதன் துணை வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மற்றும் எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட சில தனியார் வங்கிகள் மூலம் இவற்றை வாங்கலாம். ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் மூலமும் வாங்கலாம். இந்த பத்திரங்களை காகித வடிவில் மட்டும் தான் வாங்க முடியும். இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுபவை அல்ல. குறைந்த பட்ச தொகையாக, 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஒரு பத்திரத்தின் முக மதிப்பு இது. உச்சவரம்பு இல்லை. பத்திரம் அளிக்கும் வட்டி வருமானத்திற்கு அவரவர் வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரி உண்டு. மொத்த வட்டி வருமானம், 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படும்.
சாதகம், பாதகம் என்ன?தற்போதையை சூழலில் வட்டி விகிதம் குறைவாக உள்ளது. இது மேலும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. சிறு சேமிப்பு மற்றும் வைப்பு நிதிகளுக்கான வட்டி குறையும் போக்கு காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பத்திரங்கள் அளிக்கும் 8 சதவீத வட்டி ஈர்ப்புடையதாக இருக்கிறது. எனவே இவை, ஐந்தாண்டு வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றை விட அதிக வட்டி விகிதம் கொண்டுள்ளன. அரசு நிர்ணயித்த வட்டி விகிதம் இன்னமும் மாற்றப்படாமல் தொடர்கிறது. இப்போது முதலீடு செய்தால் ஆறு ஆண்டுகளுக்கு இதே வட்டி விகித பலனை பெறலாம்ஆனால், இந்த பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாதவை என்பதால் இவற்றை விற்பதற்கான சந்தை வாய்ப்பு இல்லை. இந்த பத்திரத்தை கூட்டாக வாங்கலாம் என்றாலும் இவற்றை இன்னொருவருக்கு மாற்றித்தர முடியாது. இந்த பத்திரங்களை அடமானம் வைத்து கடன் பெறலாம் என்றாலும், இந்த வசதியை அளிக்கும் வங்கிகளில் மட்டுமே இது சாத்தியம்.பத்திரங்களை ஆன்லைன் வடிவில் கையாள முடியாது. பாதுகாப்பான வருமானத்தை முதன்மையாக கருதும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|