பதிவு செய்த நாள்
14 பிப்2017
00:41
மும்பை : வலைதள பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளுக்கு இழப்பீடு வழங்கும், ‘சைபர்’ பாதுகாப்பு காப்பீடுகளை பெற, வங்கிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன், எஸ்.பி.ஐ., – ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளைச் சேர்ந்த, 32 லட்சம் வாடிக்கையாளர்களின், ‘டெபிட் கார்டு’ தகவல்களை, கம்ப்யூட்டர் நாசகாரர்கள் திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. திருடப்பட்ட தகவல்கள் மூலம், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, பல வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணம், ‘அபேஸ்’ செய்யப்பட்டது. இதன் காரணமாக, எச்.டி.எப்.சி., – யெஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய டெபிட் கார்டு வழங்கின. எஸ்.பி.ஐ., தற்காப்பு நடவடிக்கையாக, 6 லட்சம் டெபிட் கார்டுகளை முடக்கி, வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்கியது.
பேங்க் ஆப் பரோடா, 1 லட்சம் டெபிட் கார்டு விபரங்கள் திருடு போனதாக தெரிவித்திருந்தது. இந்திய நிதி வரலாற்றில், முதன்முறையாக நடைபெற்ற இந்த, ‘மெகா’ தகவல் திருட்டைத் தொடர்ந்து, வங்கிகள், ‘சைபர்’ பாதுகாப்பு காப்பீடு செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசின், மின்னணு பணப் பரிவர்த்தனை ஊக்குவிப்பு திட்டம் மேலும் உத்வேகம் அளித்துள்ளது. ‘இதன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக, ஆண்டுக்கு சராசரியாக, 50 சதவீத வளர்ச்சியை கண்டு வந்த சைபர் பாதுகாப்பு காப்பீட்டு துறை, தற்போது, 100 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது,’’ என, பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் இன்சூரன்ஸ் தலைவர், பரக் குப்தா தெரிவித்து உள்ளார்.இருந்த போதிலும், சைபர் பாதுகாப்பு காப்பீட்டு சந்தையின் மதிப்பு, 60 கோடி ரூபாய் என்ற அளவிற்கு, மிகவும் குறைவாகவே உள்ளது.
வங்கிகள், தங்கள் வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகளுக்கு காப்பீடு செய்து கொள்ளவே, அதிகம் அக்கறை காட்டி வந்தன. தற்போது, ‘இ – வாலட்’ போன்ற மின்னணு பணப் பை நிறுவனங்களும், வங்கிகள் வாயிலான நிதிச் சேவைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதனால், இது போன்ற மூன்றாம் நபர் நிறுவனங்கள் வாயிலான, ‘சைபர்’ மோசடிகளுக்கும், காப்பீடு வசதி பெற, வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. எஸ்.பி.ஐ., அதன், 30 கோடி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சைபர் பாதுகாப்பு காப்பீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிற வங்கிகளும், பலதரப்பட்ட சைபர் காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்து வருகின்றன. இதனால், சைபர் காப்பீடுகளை வழங்கும், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு, டாடா ஏ.ஐ.ஜி., – எச்.டி.எப்.சி., எர்கோ, பஜாஜ் அலையன்ஸ் உள்ளிட்ட, பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வருவாய், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|