பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:35
பீஜிங் : ‘அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில், தலைசிறந்து விளங்கும் இந்திய வல்லுனர்களை புறக்கணித்து விட்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடியதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறு செய்து விட்டது’ என, அந்நாட்டின் அரசு நாளிதழான, ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த இந்த நாளிதழ், முதன்முறையாக, நம் நாட்டிற்கு ஆதரவான கட்டுரையை வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்:கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், அவற்றின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை, சீனாவில் அமைக்க ஆர்வம் காட்டின. இதனால், சீனாவில் வரலாறு காணாத வகையில், தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. தற்போது, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சீனர்களை விட, குறைவான ஊதியத்தில், திறமை வாய்ந்த வல்லுனர்கள் இந்தியாவில் கிடைப்பதும், இளையோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதும் தான், இதற்கு காரணம்.
உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த, சி.ஏ., டெக்னாலஜிஸ் நிறுவனம், சீனாவில், 300 வல்லுனர்களுடன் செயல்பட்டு வந்த, அதன் ஆய்வு மையத்தை மூடி விட்டு, இந்தியாவில், 2,000 வல்லுனர்களைக் கொண்ட பிரிவை அமைத்துள்ளது. இது போல, சீனாவில் உள்ள, பல ஆய்வு நிறுவனங்கள், இந்தியாவில் கால்பதித்து வருகின்றன. சீனா, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு, கோடிக் கணக்கான டாலர்களை பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. அது போல, வலைதளங்கள் மூலம் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், ஆய்வு மையங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், ஏராளமான ஊக்கச் சலுகைகளை வழங்குகிறது.
இருந்த போதிலும், சீனாவில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதும், பணியாற்றக் கூடிய வயதில் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், பாதகமான அம்சங்களாக உள்ளன. அதனால், சீன அரசின் முயற்சியால், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு திட்டங்கள் பெருகினாலும், அவற்றுக்கான வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சீனா, இந்திய வல்லுனர்களை புறக்கணித்து, அமெரிக்க, ஐரோப்பிய வல்லுனர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது தவறு.
அதுமட்டுமின்றி, இந்திய அறிவியல் வல்லுனர்களை ஈர்ப்பதில் போதிய அக்கறை காட்டவும், சீனா தவறி விட்டது. இதை உணர்ந்து, தற்போது இந்தியா போன்ற நாடுகளில் உள்ள, தொழில்நுட்ப வல்லுனர்களை ஈர்ப்பதில், சீனா கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. சீனாவின் குய்ஸோ மாகாணத்தில் உள்ள நிறுவனங்கள், இந்திய வல்லுனர்களை ஈர்க்கும் நோக்கில், வீடு, காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்குகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|