பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
06:34
மும்பை : ‘நடப்பு நிதியாண்டில், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, ஓட்டல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்தாலும், வருவாய், 6 – 7 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ இந்திய ஓட்டல் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஓட்டல் துறை, பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு தடை; ஜூலை, 1ல் அறிமுகமாகும் ஜி.எஸ்.டி.,யில் அதிக வரி விதிப்பு போன்றவை, இத்துறையின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன.
இவற்றால், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், இந்திய ஓட்டல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, முந்தைய நிதியாண்டின், 8 – 10 சதவீதத்தை விட குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இருந்த போதிலும், ஓட்டல் துறையின் வருவாய், 6 – 7 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு, ஓட்டல் அறைகளுக்கான தேவை அதிகரித்து உள்ளதும், அறை வாடகை வாயிலான சராசரி வருவாய் உயர்ந்து வருவதும், முக்கிய பங்களிப்பை வழங்கும் எனலாம்.
எனினும், கடந்த நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், ஓட்டல் துறையின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது. அதே சமயம், செலவு குறைவால், செயல்பாட்டு லாப வரம்பு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில், தேசிய அளவில், ஓட்டல் அறைகளின் சராசரி பயன்பாடு, 64 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 62 சதவீதமாக இருந்தது. ஓட்டல் அறையின் ஒரு நாள் சராசரி வாடகை, 5,700 ரூபாயாக உள்ளது.
ஓட்டல் அறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவை வாயிலான, ஒரு நாள் சராசரி வருவாய், 5 – 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வருவாய், கடந்த, 11 காலாண்டுகளாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, ஓட்டல்கள் பெருகி வருகின்றன. எனினும், ஒருசில கட்டுமான திட்டங்களின் தாமதத்தால், பிரீமியம் ஓட்டல் பிரிவில், புதிய அறைகளின் எண்ணிக்கை, 5 – 5.5 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி, 2020 மார்ச் வரை, இதே அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2010 – 13ல், 17 சதவீதமாகவும், 2013 – 16ல், 7 சதவீதமாகவும் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊக்குவிப்பு:
ஓட்டல் மற்றும் சுற்றுலா துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் அருகே அமைக்கப்படும், இரண்டு, மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஓட்டல்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரி விலக்கு சலுகை அளிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|