பதிவு செய்த நாள்
08 ஜூன்2017
05:29
புதுடில்லி: மத்திய நிதியமைச்சகம், அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்பாக வரும் விண்ணப்பங்களை, 60 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இத்தகைய, ஒற்றை சாளர நடைமுறையால், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, விரைவாக ஒப்புதல் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்தியாவில், 1990களின் துவக்கத்தில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகமான போது, அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை பரிசீலித்து ஒப்புதல் வழங்க, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது.
மாற்றம்
இவ்வாரியம், 1996ல் மறுசீரமைக்கப்பட்டு, தலா, 600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், டி.ஐ.பி.பி., எனப்படும், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு மாற்றப்பட்டது. அது முதல், எப்.ஐ.பி.பி., அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை பரிசீலித்து, அவற்றின் மீதான பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொலை தொடர்பு, மொத்த விற்பனை, பத்திரிகை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியின்றி, நேரடியாக அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, தொலை தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, சில்லரை விற்பனை உள்ளிட்ட, 11 துறைகளில் மட்டுமே, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள, அரசு அனுமதி தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சீரான நடைமுறை
அதனால், கடந்த மாதம் மத்திய அமைச்சரவைக் குழு கூடி, 25 ஆண்டு களாக இயங்கி வந்த, எப்.ஐ.பி.பி., அமைப்பை கலைக்க ஒப்புதல் அளித்தது. இனி, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களே, அன்னிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்களை பரிசீலித்து, முடிவு எடுக்கலாம்.
இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம், அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: எப்.ஐ.பி.பி., கலைப்பைத் தொடர்ந்து, இனி அன்னிய நேரடி முதலீட்டு விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் ஒப்படைக்கப்படும். விண்ணப்பங்களை, 60 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை நிராகரிக்கும்பட்சத்தில், அதற்கான ஒத்திசைவை, டி.ஐ.பி.பி.,யிடம் பெற வேண்டும்.
தொழில் துறை அமைச்சகம், அனைத்து அமைச்சகங்களின் நிர்வாகப் பிரிவுடன் கலந்தாலோசித்து, அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை பரிசீலிப்பதற்கான, வழிகாட்டு நெறிகளை விரைவில் வெளியிடும். இது, அனைத்து துறைகளும், ஒரே சீரான நடைமுறையை பின்பற்ற உதவும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் குறித்து, டி.ஐ.பி.பி., முடிவெடுக்கும். அரசு அனுமதி தேவைப்படாத துறைகளில், அதே சமயம் உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை மட்டும், மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|