பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
00:32
புதுடில்லி : இந்தியாவின் இன்போசிஸ் முதல், பிரிட்டனின் பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ வரை, பல்வேறு நிறுவனங்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய் தகவல்களால், அவற்றின் பாரம்பரிய பெருமை, மதிப்பு, வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளன.
சமீபத்தில், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களில் வைத்துள்ள பங்குகளை, நிறுவனர்கள் விற்றுவிட்டு வெளியேற உள்ளதாக, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனங்களின் பங்குகளை, அவசர அவசரமாக முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர். இதனால், அப்பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தது. உடனே நிறுவனர்கள், பங்கு விற்பனை குறித்த செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டனர்.
இது போன்ற தவறான தகவல்கள், ‘பேஸ்புக், டுவிட்டர்’ போன்ற சமூக வலைதளங்களில் வெளியாவதும், அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடுவதும், சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ‘இத்தகைய பொய் தகவல்கள், இயக்குனர் குழுவின் கவனத்தை திசை திருப்பி, மூத்த நிர்வாகிகளை வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கவும், சமூகத்தில் நிறுவனத்தின் மதிப்பு குறையவும் காரணமாக உள்ளன’ என, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. அவை, இத்தகைய பிரச்னை குறித்து விரிவாக விளக்கி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.
இதே போல, அமெரிக்க பங்குச் சந்தைகளில் இடம் பெற்றுள்ள ஏராளமான நிறுவனங்களும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விஷம பிரசாரங்களால், அவற்றின் மதிப்பு சீர்குலைவதுடன், முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, பங்கு விலை வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாக கவலை தெரிவித்து உள்ளன. சர்வதேச அளவில், பிரிட்டிஷ் அமெரிக்கன் டுபாக்கோ, கனடா கூஸ் ஹோல்டிங்ஸ், பிரவுன் போர்மன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் எதிர்மறை கருத்துக்களால், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நிதி நிலை மோசமடைவதாக கூறி உள்ளன.
கனடா கூஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஆயத்த ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் வாத்து இறக்கையில் தயாரிக்கப்படும் ஆடைகள் விற்பனைக்கு, பிராணி நல ஆர்வலர்களால் பாதிப்பு ஏற்படும் என, அச்சம் தெரிவித்து உள்ளது.
‘சமூக ஊடகங்களில் தவறான பரப்புரை வெளியாகி, எங்கள் கடைகள் முன், பிராணி நல ஆர்வலர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினால், விற்பனை பாதிக்கப்படும்’ என, இந்நிறுவனம் கூறிஉள்ளது. புகழ் பெற்ற, ‘ஜேக் டானியல்ஸ், பின்லாந்தியா’ போன்ற மதுபானங்களை தயாரிக்கும் பிரவுன் போர்மன் கார்ப்பரேஷன், ‘நுகர்வோர், போட்டி நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு மாற, சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் எதிர்மறை கருத்துக்கள் உதவுகின்றன’ என, கூறியுள்ளது. சமூக வலைதளங்கள் பொறுப்புடன் செயல்பட, ஒருங்கிணைந்த முயற்சி தேவை என, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|