பதிவு செய்த நாள்
29 ஜூன்2017
22:45
மும்பை : ‘‘வலைதளம் மூலம் மொபைல் போன்களை வாங்குவது போல, மியூச்சுவல் பண்டுகளில் சுலபமாக முதலீடு செய்யும் வகையில், விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்,’’ என, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவர், மேலும் பேசியதாவது:இதர நாடுகளுடன் ஒப்பிடும் போது, மியூச்சுவல் பண்டு முதலீடுகளில், இந்தியா பின்தங்கி உள்ளது. சர்வதேச அளவில், 58 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு துறை நிர்வகிப்பதை விட அதிகம்.நம் நாட்டில், 10ல், 9 பேரிடம் மொபைல் போன் உள்ளது; மூன்று பேரிடம், ஸ்மார்ட் போன் உள்ளது. ஆனால், 25 பேரில் ஒருவர் தான், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்கிறார்; இந்நிலை மாற வேண்டும். மியூச்சுவல் பண்டு முதலீடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, முதலீட்டு விதிமுறைகளை, ‘செபி’ மேலும் எளிமையாக்க வேண்டும். அத்துடன், விளம்பரங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும்.இந்த நிலையிலும், மியூச்சுவல் பண்டு துறை, வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது.எனினும், மியூச்சுவல் பண்டு முதலீட்டு விதிமுறைகளை மேலும் எளிமையாக்கினால், அடுத்த ஐந்து ஆண்டு களில், இத்துறை, 10 மடங்கு வளர்ச்சி காணும்.வங்கிகள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை தெரிந்து கொள்வது தொடர்பான விதிகளை பின்பற்றுவோருக்கே, வங்கிக் கணக்கை துவக்கி தருகின்றன.அதனால், வங்கிக் கணக்கு வைத்துள்ள யாவரும், நேரடியாக மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம். இது, மியூச்சுவல் பண்டு முதலீடுகளை மேலும் சுலபமாக்கும். அது போல, விளம்பரங்களுக்கான விதிமுறைகளை எளிமையாக்கினால், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் மதிப்பு, பரவலாக பலரையும் சென்றடையும்.கடந்த, 1964ல், இந்தியாவின் முதல் மியூச்சுவல் பண்டு நிறுவனமான, யு.டி.ஐ., துவங்கப்பட்டது. அடுத்த, 30 ஆண்டுகள் வரை, தனியார் நிறுவனம் எதுவும் இத்துறையில் நுழையவில்லை. நாங்கள், ஷியாம் கோத்தாரியுடன் இணைந்து, 1993ல், கோத்தாரி பயனீர் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தை துவக்கி, இத்துறையில் நுழைந்த, முதல் தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றோம்.கடந்த, 1995ல், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் கீழ் நிர்வகித்த சொத்து மதிப்பு, 60 கோடி ரூபாயாக இருந்தது; இது, தற்போது, 2.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், இந்திய மியூச்சுவல் பண்டு துறை நிர்வகித்த சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.அது போல, இத்துறையில் தனிநபர் முதலீட்டாளர் எண்ணிக்கை, 6 கோடியில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது, 75வது சுதந்திர தின ஆண்டில், 60 கோடியாக உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|