பதிவு செய்த நாள்
01 ஜூலை2017
00:54
புதுடில்லி : ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு, 2018 முதல், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை உள்ளிட்ட, தேவையான விபரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என, விதிமுறைகளில் திருத்தம் வர இருக்கிறது.
பொதுவாக, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களில், பெரும்பாலானவைக்கு, அதிகபட்ச சில்லரை விலை உள்ளிட்ட விபரங்கள் தரப்படுவதில்லை. ஆனால், இனி இத்தகைய தகவல்களை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளது. அதே போல், மருத்துவ சாதனமாக கருதப்பட்டு வந்த, ‘ஸ்டென்ட்ஸ்’ உள்ளிட்டவை மருந்து பொருளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றுக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை உள்ளிட்ட, தேவையான அனைத்து தகவல்களையும் கட்டாயம் தர வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது.
மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ‘பேக்கேஜ்’ செய்யப்பட்ட பொருட்களுக்கான எடை அளவுகள் விதி – 2011ல், திருத்தங்களுக்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார். இந்த திருத்தங்கள், 2018 ஜன., 1 முதல் அமலுக்கு வருகிறது. ‘பேக்கிங்’ செய்யப்படுவதற்கு முன், பொருட்களின் லேபிளில், என்னென்ன தகவல்கள் தரப்பட வேண்டும் என்பது குறித்த விதிகளை, இந்த புதிய சட்டத்திருத்தம் வகுத்து கொடுத்துள்ளது.
இதன்படி, மின்னணு வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் மருந்தாக கருதப்படும் என, அறிவிக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றுக்கு, புதிய திருத்தங்கள் படி, லேபிளில் கூடுதல் தகவல்களை வழங்க வேண்டியதிருக்கும்.
இது குறித்து, அரசு தரப்பில் கூறப்படுவதாவது: நுகர்வோரின் நலன் காக்கும் வகையிலும், எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும், இந்த திருத்தங்கள் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒரே பொருளுக்கு இரண்டு விதமான அதிகபட்ச சில்லரை விற்பனை விலை இருக்கும் நிலையையும் தடுக்கும்.இதனால், யாரும் வெவ்வேறு விதமான அதிகபட்ச சில்லரை விலையை பயன்படுத்த முடியாது. ஏதாவது ஒரு சட்டம், அப்படி இரட்டை சில்லரை விலைக்கு அனுமதி வழங்கி இருந்தால் ஒழிய, இனி இரட்டை சில்லரை விற்பனை விலைக்கு வழி இருக்காது.
சினிமா தியேட்டர்கள், மால்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களிலும் இனி, இரட்டை சில்லரை விலை குறித்த பிரச்னைகள் இருக்காது. ‘ஆன்லைன்’ மூலம் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், தயாரிப்பாளரின் பெயர், முகவரி, சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் எங்கு புகார் செய்ய வேண்டும் என்ற தகவல் உள்ளிட்ட தகவல்களை தருவது கட்டாயமாக்கப்படும்.
மேலும், லேபிளில் உள்ள எழுத்துக்கள், பெரும்பாலும் படிக்க முடியாத அளவுக்கு சிறிதாக அச்சிடப்படுவதை மாற்றி, பெரிய எழுத்துக்களில் எளிதாக வாசிக்கும்படி அச்சிட வேண்டும். ‘பார்கோடிங், கியூ.ஆர்., கோடிங்’ போன்ற வசதிகளை, விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ சாதனங்கள்:
மருத்துவ சாதனங்களை பொறுத்தவரை, ஸ்டென்ட், வால்வு, சிரிஞ்சு, உடலினுள் வைக்கப்படும் செயற்கை பொருட்கள் போன்றவற்றுக்கான விலை குறித்து, பல புகார்கள் வருகின்றன. வாங்க இருக்கும் நுகர்வோரின் வசதியை பொறுத்து, அவற்றின் விலை சொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. சிலவற்றுக்கு, அதிகபட்ச சில்லரை விலையை நிர்ணயித்த பின்னும் கூட, அவற்றை குறிப்பிடாமல் இருக்கின்றனர். இவற்றை களையும் வகையில், புதிய சட்டத்திருத்தங்கள் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|