பதிவு செய்த நாள்
13 ஜூலை2017
23:41
புதுடில்லி : ‘‘குழாய் வாயிலான இயற்கை எரிவாயு வினியோகத்தை, அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், இரு மடங்கு உயர்த்தி, 30 ஆயிரம் கி.மீ., ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,’’ என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். அவர், துருக்கியில் நடைபெற்ற, 22வது சர்வதேச பெட்ரோலிய துறை மாநாட்டில் பேசியதை, அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: இந்திய இயற்கை எரிவாயு துறையில், மேலும் அதிக சீர்திருத்தங்கள் வர உள்ளன. பசுமை குடில் வாயுக்களையும், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைத்து, இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க உள்ளோம். துாய்மையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எரிபொருட்களை ஊக்குவித்து, 2030க்குள், காற்று மாசுபாட்டை, மூன்றில் ஒரு பங்கு குறைக்க திட்டமிட்டு உள்ளோம்.
இதற்காக, இயற்கை எரிவாயு வள ஆய்வு மற்றும் உற்பத்தியில், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றாக, உள்நாட்டில், இயற்கை எரிவாயுவிற்கு சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இயற்கை எரிவாயு வர்த்தக மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையத்தில், நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவை விற்பனை செய்யலாம்.
தற்போது, இயற்கை எரிவாயு உபரியாக உள்ள நாடுகளில் நிலவும் விலைக்கேற்ப, இந்தியாவில், மத்திய அரசின் விதிமுறைப்படி, இயற்கை எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், நீண்ட கால ஒப்பந்தப்படி இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவின் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த மாறுபாடு காரணமாக, இந்தியாவில், எரிவாயு வள ஆய்விலும், உற்பத்தியிலும் முதலீடு செய்ய, அன்னிய நிறுவனங்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. அவை, இயற்கை எரிவாயுவின் விலையை, சந்தை தான் தீர்மானிக்க வேண்டும் என, விரும்புகின்றன. இதையொட்டி, இயற்கை எரிவாயு வர்த்தகத்திற்கு, பிரத்யேக தளம் அமைத்துக் கொடுக்கப்படும்.
வரும் ஆண்டுகளில், தேசிய அளவில், குழாய் வாயிலான இயற்கை எரிவாயு வினியோகம், 30 ஆயிரம் கி.மீ., ஆக அதிகரிக்கப்படும். உலகளவில், கச்சா எண்ணெய் பயன்பாட்டில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டு தேவையில், 80 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. இதில், 10 சதவீதத்தை, 2022க்குள் குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு செய்ய, சர்வதேச நிறுவனங்களை அழைக்கிறோம். இத்துறையில், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்தவெளி உரிம கொள்கைப்படி, 28 லட்சம் சதுர கி.மீ., பரப்பில், விருப்பமான பகுதியை, இயற்கை எரிவாயு வள ஆய்வுக்கு, நிறுவனங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
-பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், துருக்கி பெட்ரோலிய துறை மாநாட்டில் பேசியது...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|