பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
15:02
குன்னூர் : நீலகிரியில், தேயிலைதூள் தேக்கமடைவதால், 102 சிறு தேயிலை தொழிற்சாலைகள் இன்று (ஜூலை 15) முதல் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் விவசாயகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 2015–16 புள்ளி விபரத்தின் படி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 834 ஏக்கர், பரப்பளவில் தேயிலை பயிரிடப்படுகிறது. இதனை நம்பி, 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். 36 எஸ்டேட்கள் மூலம் தனியாக தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மூலம் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக, தேயிலை ஏலத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த, இந்த ஆண்டுக்கான, 28வது தேயிலை தூள் ஏலத்தில், 46 சதவீதம் மட்டும் விற்பனையாகியுள்ளது. இறுதியாக, ஒரு கிலோ தேயிலை தூள், 60 ரூபாய்க்கு மட்டும் ஏலம் போனது.
தமிழகம் புறக்கணிப்பு :
சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆனந்த் கூறியதாவது: தமிழகத்தில் கோவை, குன்னூரில் மட்டுமே அரசின் விதிமுறைப்படி, உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக, விற்பனையாளர்கள் ஏலத்தின் மூலம் தேயிலை வாங்கி வருகின்றனர். ஆனால், வட மாநிலங்களில் இருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து புரோக்கருக்கு சென்ற பிறகே, தேயிலை தூள் விற்பனையாளர்களுக்கு வருகிறது. இதனால், ‘பில்லிங்’ பிரச்னை சமீபகாலமாக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி., அறிவிப்பும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த குழப்பத்தின் காரணமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், தேயிலை ஏலத்தை புறக்கணித்துள்ளனர். குறிப்பாக, இந்துஸ்தான் லீவர், டாடா கம்பெனி மற்றும் ஏற்றுமதியாளர்கள் தேயிலை ஏலத்தில் கலந்து கொள்வதில்லை. இதனால், தற்போது வரை, 60 லட்சம் தேயிலை தூள்கள் ஏலம் போகாமல் தேக்கமடைந்துள்ளன. இந்த பிரச்னையால், வேறு வழியின்றி மாவட்டத்தில் உள்ள 102 சிறுதேயிலை தொழிற்சாலைகள், வரும், 21ம் தேதி வரை உற்பத்தியை நிறுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு ஆனந்த் கூறினார்.
கண்டுகொள்ளாத தேயிலை வாரியம்:
போராட்டத்தின் முதல் நாளான இன்று, சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால், தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழிற்சாலைகளில் பசுந்தேயிலையை வாங்காத சூழ்நிலையில், விவசாயிகளும் பாதிப்படைய துவங்கியுள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண தேயிலை வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|