பதிவு செய்த நாள்
05 ஆக2017
06:56
புதுடில்லி : மத்திய அரசு, வேலைவாய்ப்பை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும், வியாபாரம் புரிவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், ‘தேசிய நெடுஞ்சாலை கிராமம்’ மற்றும் ‘தேசிய நெடுஞ்சாலை கூடு’ என்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
மும்பையில், இத்திட்டங்களுக்கான சின்னங்களை அறிமுகப்படுத்தி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: இந்த இரு திட்டங்களின் கீழ், வாகனங்களில் தொலைதுாரப் பயணம் மேற்கொள்வோர், சரக்கு லாரி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட சிறிய பகுதிகள் உருவாக்கப்படும்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம், ஆங்காங்கே பயணியர் தங்கி இளைப்பாறுவதற்கு விடுதிகளும், உணவகங்களும் உள்ளன. அது போல, இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், ஒவ்வொரு, 50 கி.மீ., துாரத்திலும், அனைத்து வசதிகள், தங்குமிடம், உணவகம், பெட்ரோல் நிலையம் கொண்ட பகுதிகள் அமைக்கப்படும். இங்கு, உள்ளூரில் புகழ் பெற்ற கைவினைப் பொருட்கள், பழங்கள் போன்றவையும் கிடைக்கும்.
உதாரணமாக, நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, பிரசித்தி பெற்ற ஆரஞ்சு பழங்களை ருசிக்கலாம். நாசிக் வழியே சென்றால், திராட்சை பழங்களையும், ஹிமாச்சல பிரதேசத்தில்,ஆப்பிள்களையும் வாங்கலாம். இந்த கிராமங்களை அமைக்க, முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, நெடுஞ்சாலை ஓரம் நிலம் வைத்துள்ளோரும், அரசுடன் கைகோர்க்கலாம். 1 ஹெக்டருக்கு மேல் வைத்துள்ள நில உரிமையாளர்கள், இத்திட்டத்தில் இணைவதற்கு, செப்., 21 வரை விண்ணப்பிக்கலாம். இந்த கிராமங்களுக்கான இலவச அணுகு சாலை, எரிவாயு மற்றும் பெட்ரோல் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை, அரசு செய்து தரும்.
‘நெடுஞ்சாலை கிராமம்’ 5 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப் பகுதியிலும், ‘நெடுஞ்சாலை கூடு’ 5 ஹெக்டருக்கு உட்பட்ட இடத்திலும் அமைக்கப்படும்.இது போன்ற வசதிகள், முதற்கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், 1,000 இடங்களில் ஏற்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் பிரயாணம் செய்வோர், சரக்கு லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்டோரின் வசதிக்கான இத்திட்டம், முதலீடுகளுக்கு நல்ல வாய்ப்பாகும். அத்துடன், உள்ளூரில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அப்பகுதி சார்ந்த சிறிய வியாபாரங்களை ஊக்குவித்து, உள்ளூர் மக்களின் நிதியாதாரம் பெருகவும் வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்:
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், உணவகம், தங்குமிடம், கடைகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் திட்டத்திற்காக, முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். அங்கீகாரம் உள்ள, ‘லே அவுட்’ வைத்திருப்போரும், இத்திட்டங்களில் இணையலாம். இந்த இரு திட்டங்களின் கீழ் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சொந்தமாக உள்ள, 200 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 34 பகுதிகளில், தனியார் முதலீட்டிற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அடுத்த மாதம், 119 இடங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட உள்ளன.
-தீபக் குமார், தலைவர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|