பதிவு செய்த நாள்
07 ஆக2017
08:18
நோய்க்கான மருந்தை துளி துளியாக கொடுப்பது சரியா? வலிமையான மருந்தைக் கொடுத்து, உடனடியாக மீட்பது சரியா? நோயின் தன்மையைப் பொறுத்து, மருத்துவர்கள் இந்த முடிவை எடுக்கக்கூடும். பொருளாதாரம் குணமாக, ஹெவி டோஸேஜ் தான் தேவை. ஆனால், சமீபத்திய ரெப்போ வட்டி குறைப்போ, ரொம்ப சாதா டோஸேஜ் என்பது நிபுணர்களின் கருத்து.
மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குத் தரும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை, 6.25 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக சமீபத்தில் குறைத்தது. இதனால், வீட்டுக்கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையக்கூடும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவோ, வட்டி விகிதங்கள் குறையாது என்று சொல்லிவிட்டார். இன்னும் ஒரு படி முன்னேறி, வழக்கமான சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட, 4 சதவீத வட்டியையும், 3.55 சதவீதமாக குறைத்துவிட்டது, எஸ்.பி.ஐ., மற்ற வங்கிகளும் இதைப் பின்பற்றப் போவது உறுதி.
வட்டி விகிதம் குறையும்இதனால், வழக்கமான வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள் குறையும். ஓய்வூதியர்களும், முதியவர்களும் நம்பியிருப்பது வைப்பு நிதியைத்தான். அவர்களுக்கு இது பெரிய இடி. வட்டி விகிதங்கள் குறைவதன் காரணமாக, மக்கள் பங்குச் சந்தை, பரஸ்பர நிதி ஆகியவற்றை நோக்கி நகர்வர் என்பது கணிப்பு. பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே நம்பும் போக்கு இந்தியாவில் அதிகம். ரிஸ்க் எடுக்க ஓய்வூதியர்கள் ரொம்பவே தயங்குவர். இன்னும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் சரி, இப்போதைய கவர்னர் உர்ஜித் படேலும் சரி, ஒரு குறையைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகப் போய் சேருவதில்லை என்பதே அவர்களுடைய குற்றச்சாட்டு. போட்டிகள் மிகுந்த துறையான வீட்டுக் கடன், வாகனக் கடன்களில் மட்டும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன. முன்பு, பேஸ் ரேட் என்ற நிலையிலிருந்து மாறி, எம்.சி.எல்.ஆர்., என்ற அடிப்படையை ஒட்டி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
எம்.சி.எல்.ஆர்., நடைமுறையின் மூலமும் பயனாளர்களுக்கு உரிய பயன் போய் சேரவில்லை, அதனால், இதையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது உர்ஜித் படேலின் கருத்து. பத்தாண்டுகளுக்கு முன், நிலையான வட்டி, மாறுபடும் வட்டி என்று இரண்டு விகிதங்கள் இருந்தன. 2006 சமயத்தில், வட்டி விகிதங்கள் கடுமையாகக் குறைந்தன. நிலையான வட்டி, 7 சதவீதம் அளவுக்கு வீழ்ந்தது.
மிக அதிக வட்டிமாறுபடும் வட்டி விகிதம் இதற்கும் கீழ். பலரும் தைரியமாக வீடுகள் வாங்க முடிந்தது. அதைவிட, மாறுபடும் வட்டி விகிதத்திலிருந்து நிலையான வட்டி விகிதத்துக்கு மாறிக்கொண்டு, விரைவில் கடனை அடைத்தவர்களும் உண்டு.தற்போது, நிலையான வட்டி விகிதத்தை எந்த வங்கியும் தருவதில்லை. தந்தாலும், அது மிக மிக அதிக வட்டி. வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டிக்கொண்டு வாழுவதற்கு இந்தியர்கள் என்ன அமெரிக்கர்களா? மாறுபடும் வட்டியின் பல்வேறு கோர முகங்கள் தான் பேஸ் ரேட் என்பதும், எம்.சி.எல்.ஆர்., என்பதும். நீண்டகால அளவில் வங்கிகள் லாபம் ஈட்டுவதற்கு போடப்பட்ட தூண்டில் இது.
வாராக் கடன் சுமைரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி விகிதத்தால், தொழில் வளர்ச்சி உயருமா; வருவாய் பெருகுமா? இங்கே தான் சிக்கலே. மிகப்பெரும் நிறுவனங்கள், கடன் பெற வங்கிகளுக்கு வருவதில்லை. தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து வங்கி தரும் வட்டியை விடக் குறைவான வட்டியில் கடன் பெற முடியும். வங்கிக் கடனை நம்பியிருப்பவை சிறு மற்றும் குறுந்தொழில்களே. இவற்றால் கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்த முடியவில்லை. விளைவு, வங்கிகள் கடன் கொடுக்க ரொம்பவும் தயங்குகின்றன. ஏற்கனவே வாராக் கடன் சுமை தோளை அழுத்தும்போது, ரிஸ்க் எடுக்க எந்த வங்கியும் முன்வராது.
அப்படியானால், வட்டி விகித குறைப்பால் பலனே இல்லையா? சரியான நேரத்தில் போதுமான அளவு செய்திருந்தால், பயன் இருந்திருக்கும். 2016 அக்டோபரில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு சந்திப்பில், ரெப்போ விகிதம், 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. பத்து மாதங்கள் கழித்து, ஆகஸ்ட், 2017ல் தான் அடுத்த கால் சதவீத வட்டி விகித குறைப்பு.
குதிரை பாய்ச்சலுக்கு தயார்இந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் இவை: நுகர்வோர் பணவீக்கம் படிப்படியாக குறைந்து, தற்போது, 1.54 சதவீதமாக உள்ளது. தொழில் உற்பத்தி வளர்ச்சி, 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. பணவீக்கத்தைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டதால், தொழில் உற்பத்தி வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதோ என்ற அச்சம் எழுப்பப்படுகிறது.
2017 பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெற்ற சந்திப்புகளிலேயே வட்டி விகித குறைப்பு நடந்திருக்குமானால், அன்றே கடனுக்கான வட்டிவிகிதம் இன்னும் குறைந்திருக்கும்; வளர்ச்சியும் பெருகியிருக்கும்.தற்போது குறைக்கப்பட்டுள்ள கால் சதவீதம், யானைப் பசிக்கு சோளப் பொரி. அரை சதமோ, முக்கால் சதமோ குறைக்கப்பட்டிருந்தால், கடன் பெறுவோருக்கு பெரும் ஊக்கமாக இருந்திருக்கும்.
இத்தனை மாதங்கள் சிரமங்களிலேயே கழிந்த பின், தொழில் துறையினரிடையே பெரிய ஆர்வமில்லை. புதிய கடன்களைப் பெற்று, தொழிலில் முதலீடு செய்யும் வேகம் சுணங்கிவிட்டது.அடுத்த நிதிக் கொள்கைக் குழுவின் சந்திப்பிலாவது பெரும் வட்டி குறைப்பு இருக்குமானால், அது தொழில் துறையினரை குதிரைப் பாய்ச்சலுக்குத் தயார் செய்யும்.செய்யுமா மத்திய ரிசர்வ் வங்கி?
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|