பதிவு செய்த நாள்
11 ஆக2017
00:03
புதுடில்லி : மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோரிடம், சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த, ரன்ட்ஸ்டட் நிறுவனம், 33 நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு நிறுவன ஊழியர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்த கருத்துக்களை தொகுத்து, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோரிடம், தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றோரில், 56 சதவீதம் பேர், தற்போதைய வேலையை உதறிவிட்டு, சுய தொழில் துவங்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.
தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாக, 83 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது, சர்வதேச சராசரியான, 53 சதவீதத்தை விட அதிகம்.இந்தியாவில் தற்போது, வர்த்தகச் சூழல் நிலையாக உள்ளது. வெளிப்படையான வரி நிர்வாகத்திற்கு வழிவகுக்கும், ஜி.எஸ்.டி., அறிமுகமாகி இருக்கிறது. பெரும்பாலான துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகளுக்கான வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கவும், மின்னணு தொழில்நுட்ப பயன்பாட்டை பரவலாக்கவும், ‘மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா’ போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் சுலபமாக்கப்பட்டு உள்ளன. வலைதளம் வாயிலாக, புதுமையான தொழில்களில் ஈடுபடுவோருக்கு உதவ, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவில், தற்போது பணியில் உள்ளோரிடம் சுய தொழில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி வருகிறது.
ஆய்வில் பங்கேற்றோரில், 86 சதவீதம் பேர், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை துவக்குவதற்கான சூழல் சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளனர். புதிய நிறுவனங்களை துவக்க, மத்திய அரசு, முழு ஆதரவு அளிப்பதாக, 84 சதவீதத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த ஆய்வில், எத்தகைய நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் என்ற கேள்விக்கு, 84 சதவீதம் பேர், பன்னாட்டு நிறுவனங்களை தேர்வு செய்தனர்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணிபுரிய, 76 சதவீதத்தினர் ஆர்வம் தெரிவித்தனர். சிறிய அல்லது நடுத்தரமான தனியார் நிறுவனங்களில் பணியாற்ற தயார் என, 69 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இந்த ஆய்வு, வாரத்தில், குறைந்தபட்சம், 24 மணி நேரம் பணிபுரியும், 18 – 65 வயதுள்ளோரிடம் நடத்தப்பட்டது. அதில், 45 – 54 வயதிற்கு உட்பட்ட பலர், சுய தொழில் துவங்க தயக்கம் காட்டுவது தெரிய வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|