பதிவு செய்த நாள்
14 ஆக2017
08:09
சந்தை, சூழல் சார்ந்து நகரும் போது, சூழலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், முதலீட்டாளர்கள் மனதை எப்படி பாதிக்கும் என்பதற்கு, கடந்த வாரம் சிறந்த சான்று.
ஒரே வாரத்தில், ‘சென்செக்ஸ்’ 5 சதவீதம் இழந்ததோடு, எதிர்காலம் குறித்த பெரும் கேள்விக்குறிகள், திடீரென்று எழுந்தது எப்படி?
கடந்த வாரம் வரை, சந்தையை பற்றி கருத்து கூறுவோர் யாரும், இத்தகைய சரிவை ஏன் யூகிக்கவில்லை?
இந்த சரிவு, இத்தோடு நின்றுவிடுமா அல்லது தற்போதைய பொருளாதார நிலை சந்தைக்கு, மேலும் பல அடிப்படை சவால்களை அடுக்கிக் கொண்டே போகுமா?
இனி வரும் வாரங்களில், ஒரு முதலீட்டாளர், சந்தையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இப்படி, பல கேள்விகள் நம் மனதில் ஒரே வாரத்தில் தோன்றியுள்ளதில், எந்த ஆச்சரியமுமில்லை. சந்தையின் சக்தியும், நம் முதலீட்டு நடத்தையும் தொடர்ந்து நம்மை அத்தகைய சோதனைகளுக்கு தொடர்ந்து உட்படுத்தும் என்பதை, நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடிப்படையில், ஒன்றை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சந்தை அடுத்த சில நாட்களிலோ, வாரங்களிலோ, எப்படிப்பட்ட மாற்றங்களை சந்திக்கும் என்பதை, யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு, நம்மை தயார்படுத்திக் கொள்வது மட்டுமே, நம் கையில் உள்ளது. சந்தையின் மாற்றங்களை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதே, நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அடிப்படையில், இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, அப்படி ஒன்றும் கவலைக்கிடமாகவோ, அச்சுறுத்தும் வகையிலோ நிச்சயம் இல்லை. ஆனாலும், நாம் கடக்க வேண்டிய பொருளாதார சவால்கள், இன்னும் பல உள்ளன. அந்த சவால்களை நாம் எவ்வளவு விரைவில் கடக்கிறோமோ, அதுவே, சந்தையின் எதிர்கால போக்கை நிர்ணயிக்கும்.
முக்கியமாக, பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைகள், நிறுவனங்களின் நிதி பற்றாக்குறைகள், வளர்ச்சிக்கான முதலீடுகளை ஏற்படுத்த எடுக்கப்படும் துல்லிய நடவடிக்கைகள் மற்றும் உலக சந்தைகளின் போக்கு ஆகியவற்றில், முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தாண்டில், இதுவரை செய்த முதலீடுகளை, மதிப்பீடு சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அடிப்படையில், பல முதலீடுகள் மிக அதிக மதிப்பீட்டில் செய்யப்பட்டு இருந்தால், அவற்றை கூர்ந்து ஆய்வு செய்து மாற்றி அமைக்க வேண்டும்.
வரும் ஆண்டில் ஏற்படக்கூடிய பொருளாதார மாற்றங்கள் சார்ந்து, நம் முதலீடுகளை மாற்றி அமைக்க வேண்டும். சிறு, குறு நிறுவனபங்குகளை தவிர்த்து, பெரு நிறுவன பங்குகளில், சிறந்தவற்றை நாம் வாங்க வேண்டும். பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து காணப் போகும் முன்நகர்வு, பெரு நிறுவனங்களுக்கே அதிக பலன் தரும். ஆகவே, நம் முதலீடுகளில், அத்தகைய நிறுவனங்களை இப்போது சேர்த்துக் கொள்வது முக்கியம். பண மதிப்பு நீக்கத்திற்கு பின் நடந்த உள்நாட்டு பங்கு வர்த்தகம், குறுகிய கால நோக்கோடு செய்யப்பட்டது. அவற்றின் பலன்கள், ஏற்கனவே நம்மை வந்தடைந்து உள்ளன. தொடர்ந்து, அந்த முதலீடுகள் எந்தளவு பலனளிக்கும் என்பது கேள்விக்குறியே. இதை, நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சந்தையின் வருங்கால நகர்வில், முக்கிய பங்களிக்கப் போகும் நிறுவனங்கள், இதுவரை அதிகம் பங்களிக்காத நிறுவனங்களாக இருக்கலாம். அவற்றை அடையாளம் காண, நாம் முதலில், குறுகிய கால கண்ணோட்டத்தை கைவிட வேண்டும்.சந்தை, வரும் வாரங்களில் தொடர்ந்து பொருளாதார அடிப்படைத் தன்மைகள்சார்ந்தே நகரும் என, தோன்றுகிறது. அப்படி நகரும் போது, நாமும் அதற்கு ஏற்ற மாற்றங்களை, நம் சிந்தனையிலும், பங்கு தேர்விலும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலக சந்தையின் மீதும், நாம் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டிய கால கட்டம் இது.
எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள், தொடர்ந்து நம் பங்குகளை விற்றால், அத்தகைய விற்பனையை, நிதானமாக எதிர்கொள்ள, நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|