பதிவு செய்த நாள்
21 ஆக2017
05:49
காப்பீடு தொடர்பான பல்வேறு அம்சங்களை அறிந்திருப்பது போலவே, பல்வேறு காரணங்களால் கோரப்படாமல் விடப்பட்ட பலன் தொகையை பெறுவதற்கான வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட நிதி விஷயங்களில் ஒழுக்கமும், சீரான தன்மையும் தேவை. முதலீட்டிற்கான தவணையை மறக்காமல் செலுத்த வேண்டும். காப்பீடு பாலிசிகளுக்கும் இது பொருந்தும். முதலீடு, காப்பீடு தொகையை உரிய காலத்தில் செலுத்தி வந்தால் மட்டும் போதாது, அவற்றை முதிர்வு காலத்தில் திரும்ப பெறுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கோரப்படாத பணம்:
முதலீட்டின் பலனை பெறுவதை யாராவது மறப்பரா என கேட்கத் தோன்றினாலும், பல காரணங்களினால் உரியவர்களால் தொகை கோரப்படாமல் தேங்கி கிடப்பது என்பதும் நடைமுறை யதார்த்தமாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா? வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., வங்கி வைப்பு நிதி, சிறுசேமிப்பு நிதி, காப்பீடுக்கான முதிர்வு தொகை என, பல நிதி சாதனங்களில் உரியவர்களால் தொகை கோரப்படாமல் இருப்பது சகஜமாக இருக்கிறது. இந்த தொகையை பயனாளி அல்லது அவரது வாரிசுதாரர் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
காப்பீட்டை பொறுத்தவரை கோரப்படாத பணத்தை திரும்ப பெறுவதற்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேல் பாலிசி தாரர் சார்பில் தொகை கோரப்படாமல் இருந்தால், அந்த தொகை மூத்த குடிமகன்கள் நலவாழ்வு நிதிக்கு மாற்றப்பட்டு விடும். பொதுவாக பயனாளி சார்பில், முதிர்வு காலத்திற்கு பின் திரும்ப பெறப்படாத தொகை கோரப்படாததாக கருதப்படுகிறது. காப்பீடு என்று வரும் போது, முதிர்வு பலன், பாலிசிதாரர் மரணம் அடைந்தால் கிடைக்க வேண்டிய பலன், சர்வைவல் பலன், திரும்பி வர வேண்டிய பிரீமியம் உள்ளிட்டவை அவற்றுக்கான வட்டியுடன், செட்டில்மென்ட் தேதியில் இருந்து ஆறு மாத காலத்திற்குள் உரியவர்களால் பெறப்படா விட்டால் கோரப்படாத தொகையாக அமைகிறது.
‘அன்கிளைம்டு மணி’ என, இது குறிப்பிடப்படுகிறது. மறதி, அலட்சியம், உரிய தகவல் தெரியாமல் போவது என பலவித காரணங்களினால் இது நிகழலாம். காப்பீடு நிறுவனங்கள் இந்த தொகையை வைப்பு நிதி அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். எதிர்காலத்தில் உரியவர்கள் கோரிக்கை வைத்தால் இந்த தொகையை அதன் மூலமான வருமானத்துடன் அளிக்க வேண்டும். ஏதேனும் செலவுகள் அல்லது கட்டணங்கள் இருந்தால் கழித்துக்கொள்ளப்படும்.
எப்படி அறிவது?
காப்பீடு தொடர்பாக கோரப்படாத பணத்தை அறிவதற்கான வசதியை காப்பீடு நிறுவனங்கள் அவற்றின் இணையதளத்தில் செய்து தர வேண்டும். பாலிசிதாரரால் கோரப்படாத பணம் எனும் பிரிவின் கீழ் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியை கிளிக் செய்து பாலிசி எண், பாலிசிதாரர் பெயர், பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பித்து கோரப்படாத தொகை ஏதேனும் இருக்கிறதா என அறிந்து கொள்ளலாம். பாலிசிதாரர் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய தகவல்கள் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். காப்பீடு நிறுவனங்கள், 1,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை மட்டும் தான் இவ்வாறு குறிப்பிட வேண்டும். இந்த பகுதியை பார்த்து, கோரப்படாத தொகை இருப்பது தெரியவந்த பின், காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதிய விதிமுறை
மத்திய அரசு, மூத்த குடிமகன்கள் நலவாழ்வு நிதியை, 2015 – 16 நிதி சட்டங்கள் மூலம் உருவாக்கியது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளில் கோரப்படாமல் இருக்கும் தொகை இந்த நிதிக்கு மாற்ற வழி செய்யப்பட்டுள்ளது. பி.எப்., அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் இதில் அடங்கும். தற்போது காப்பீடும் சேர்க்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருக்கும் காப்பீடு தொகை இந்த நிதிக்கு மாற்றப்படும் என அண்மையில் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், தொகை மாற்றப்பட்ட, 25 ஆண்டுகளுக்குள் பாலிசிதாரர்கள் அல்லது அவர்கள் சார்பில் உரியவர்கள் இந்த தொகையை கோரி பெறலாம். ஆனால், 25 ஆண்டு களுக்கும் மேல் கோரப்படாத பட்சத்தில் இந்த தொகை அரசுக்கு நிரந்தரமாக சொந்தமாகி விடும்.
பாலிசி தகவல்கள்:
* காப்பீடு பாலிசி தொடர்பான தகவல்களை தெளிவாக எழுதி வைத்து உரியவர்களிடம் இதை தெரிவிக்க வேண்டும்* பாலிசியில் நாமினியை குறிப்பிட்டு, அவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்* மற்ற முதலீடுகளுக்கும் இதே போன்ற நடைமுறையை பின்பற்றுவது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|