பதிவு செய்த நாள்
30 ஆக2017
00:00
புதுடில்லி : ‘மின்னணு வர்த்தக நிறுவனங்களின் ஆண்டு விற்பனையில், ஒரு சப்ளையரின் பங்கு, 25 சதவீதத்தை தாண்டக் கூடாது’ என, மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை, அவற்றின் வலைதளத்தில் விற்பனை செய்து வருகின்றன. இந்நிறுவனங்கள், பொருட்களை தயாரித்து விற்போருக்கும், அவற்றை வாங்குவோருக்கும் இடையே, பாலமாக செயல்பட்டு, இச்சேவைக்கு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்கின்றன.
இந்நிலையில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ஓரிரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை வாய்ப்பை வழங்காமல், பல நிறுவனங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆண்டு, மத்திய அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது.அதில், ‘ஒரு மின்னணு வர்த்தக நிறுவனத்தின் மொத்த விற்பனையில், ஒரு சப்ளை நிறுவனம் அல்லது அதன் குழும நிறுவனங்களின் பங்கு, 25 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விற்பனைக்கான கால அளவு குறிப்பிடப்படாததால், அதை தெளிவு படுத்துமாறு, மின்னணு வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஐ.பி.பி., அனைத்து அரசு துறைகளுக்கும், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை குறித்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.அதில், ‘மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ஒரு நிதியாண்டில் மேற்கொள்ளும் மொத்த விற்பனையில், ஒரு சப்ளை நிறுவனம் அல்லது அதன் கூட்டு நிறுவனங்களின் பங்கு, அதிகபட்சம், 25 சதவீதத்தை தாண்டக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்னணு வர்த்தக நிறுவனங்களின் விற்பனை குறித்து, தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ஒரு நிதியாண்டில், ஒருசில நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே சந்தைப்படுத்தும் போக்கு, இதன் மூலம் முடிவிற்கு வரும். இதனால், பல்வேறு நிறுவனங்களும், ‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற வலைதள சந்தைகளில், அவற்றின் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அன்னிய நேரடி முதலீடு:
அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது, இந்த வாரியம் கலைக்கப்பட்டு விட்டதால், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை மற்றும் அன்னிய செலாவணி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள் ஆகியவையே, அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு, நேரடியாக ஒப்புதல் வழங்க, அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இத்துடன், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ள துறைகளில், வரையறுக்கப்பட்ட பொறுப்புகளை கொண்ட கூட்டு நிறுவனம், நிறுவனமாக மாற அனுமதிக்கப்படும். அது போல, ஒரு நிறுவனம், வரையறுக்கப்பட்ட பொறுப்புகளை கொண்ட கூட்டு நிறுவனமாகவும் ஒப்புதல் வழங்கப்படும்
–மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|