பதிவு செய்த நாள்
11 செப்2017
00:06
பெரும்பாலான முதலீட்டாளர்கள், ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாவிட்டாலும், குறுகிய கால நலனால் ஈர்க்கப்படுகின்றனர். இதை தவிர்ப்பது அவசியம்.
பொதுவாக எல்லாரும் முதலீடு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவே விரும்புகின்றனர். முதலீட்டின் மீதான அதிக பலனை விரும்பினாலும், ரிஸ்க் அதிகம் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை தவிர்க்க வேண்டும் என்பதில், சராசரி முதலீட்டாளர்கள் உறுதியாக இருக்கின்றனர். இது சரியான அணுகுமுறை தான். ஆனால், ரிஸ்க் எடுக்க தயாராக இல்லாத முதலீட்டாளர்கள் கூட, பல நேரங்களில் தங்களுக்கு பொருத்தம் இல்லாத மற்றும் ரிஸ்க் அதிகம் உள்ள நிதி சாதனங்களில் முதலீடு செய்வது வழக்கமாக இருப்பதாக, நிதி வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ரிஸ்க் என்ன?
பாதுகாப்பான நோக்கம் கொண்ட முதலீட்டாளர்கள் கூட, குறுகிய கால நலனை மனதில் கொண்டு, இஷ்டம் போல முதலீடு செய்ய முற்படுவது இயல்பாக இருக்கிறது. டிஜிட்டல் நாணயம் எனப்படும், ‘பிட்காயின்’ மீது ஏற்பட்டுள்ள முதலீட்டு ஆர்வத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம். வழக்கமான நாணயங்களில் இருந்து மாறுபட்ட, பிட்காயின் தொழில்நுட்ப நோக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக, பிட்காயின் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் கவரத் துவங்கியுள்ளது. சந்தையில் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வருவதால், சில ஆண்டுகளுக்கு முன் பிட்காயின் வாங்கியவர்கள், தற்போது நல்ல பலன் அடையும் நிலை உள்ளதாக கூறப்படுவது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்போது பிட்காயினில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல பலன் பெறலாம் என கூறப்படுவதால், இந்த டிஜிட்டல் நாணயம், மேலும் பலரது கவனத்தை ஈர்க்கிறது. இதன் பலனாக, பல வாடிக்கையாளர்கள் தங்களிடம் பிட்காயினில் முதலீடு செய்யலாமா... என, ஆர்வத்தோடு கேட்பதாக நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு முதலீட்டு வாய்ப்பாக பிட்காயின் தரக்கூடிய பலன்கள் பற்றி பெரிதாக பேசப்பட்டாலும், அதில் உள்ள ரிஸ்க் அம்சங்களை புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆனால், ஆச்சரியம் என்னவெனில், பல முதலீட்டாளர்கள் பிட்காயின் முதலீட்டில் உள்ள, ‘ரிஸ்க்’ அம்சங்களை புறக்கணித்து விட்டு, அதில் முதலீடு செய்யத் தயாராக இருப்பது தான் என, நிதி ஆலோசகர்கள் சொல்கின்றனர்.
நல்ல ஆலோசனைகள்:
பிட்காயின் முதலீடு பற்றி தங்களுக்கு நன்றாக தெரியும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக அமைகிறது. பிட்காயின் என்றில்லை, பொதுவாகவே சராசரி முதலீட்டாளர்கள் பலர், பாதுகாப்பான முதலீட்டை விரும்பினாலும், குறுகிய கால நலனால் கவரப்பட்டு தங்களுக்கு பொருத்தம் இல்லாத நிதி வாய்ப்புகளை நாடும் வழக்கம் கொண்டுள்ளனர்.முதலீடு விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள விரும்பும் பலரும் கூட, நண்பர்கள் கூறுவது அல்லது செய்திகளில் விவாதிக்கப்படுவதை அடிப்படையாக கொண்டு முதலீட்டு வாய்ப்பை தேர்வு செய்கின்றனர். நல்ல நிதி ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல், அலட்சியம் செய்யும் தன்மை இதற்கு காரணமாக அமைகிறது.
எளிமையே தீர்வு:
நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமல் போவதற்கு உளவியல் நோக்கிலான காரணங்கள் இருக்கின்றன. தங்களுக்கு அதிக தகவல்கள் தெரியும் என்ற உணர்வு, தாங்கள் மேற்கொண்ட முடிவு சரியானது எனும் எண்ணம் ஆகியவை, முதலீட்டாளர்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதோடு தாங்கள் எடுத்த முடிவுகளுக்கு ஏற்ப ஆலோசனை அமைந்தால், அதை எளிதாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு மாறாக ஆலோசனை அமையும் போது, ஏற்க மறுக்கின்றனர். பொதுவாகவே முதலீட்டாளர்கள் ஆலோசனை எனும் போது சிக்கலான விஷயங்களை எதிர்பார்க்கின்றனர். அதற்கு மாறாக, நிதி ஆலோசனைகள் எளிய உண்மையாக அமையும் போது, அவர்கள் அலட்சியம் கொள்கின்றனர்.
உதாரணத்திற்கு முதலீடு செய்ய ஏற்ற நேரம் எது எனும் கேள்விக்கு, மியூச்சுவல் பண்ட் போன்ற திட்டங்களில், நீண்ட கால முதலீடு செய்வது நல்லது எனும், எளிய பதில் ஈர்ப்புடையதாக அமைவதில்லை என, நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர். முதலீட்டாளர்கள் ஒரே வகையான நிதி சாதனங்களில் முதலீடு செய்வதை அலுப்பாக கருதி, ஒவ்வொரு கட்டத்திலும் புதிய சாதனங்களை எதிர்பார்க்கும் தன்மையும் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. எனவே முதலீடு விஷயத்தில், இத்தகைய தவறுகளை செய்யாமல், ஒருவர் தன் இலக்கிற்கு ஏற்ற வகையில் செயல்படுவதே சிறந்ததாக இருக்கும்.
முதலீட்டாளர்கள் மனது:
* நிபுணத்துவம் இல்லாவிட்டாலும், அதிக தகவல்கள் தெரியும் என நினைப்பது* தேர்வு செய்த முதலீட்டு வாய்ப்பு பற்றி எதிர்மறை கருத்துக்களை கேட்க விரும்பாதது* சிக்கலான தீர்வுகளே சிறந்தது எனும் எண்ணம்* தகவல்களால் குழப்பமடைவது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|