பதிவு செய்த நாள்
10 செப்2017
03:20
புதுடில்லி : வாகன உதிரி பாகங்கள் துறை, நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், ௧1 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:வாகன துறையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இத்துடன், சுற்றுச்சூழல், பாதுகாப்பு ஆகியவை தொடர்பான ஒழுங்குமுறை விதிகளையும், வாகன நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனால், வாகன உதிரி பாகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில், உள்நாட்டு வாகன உதிரி பாகங்கள் துறை, நடப்பு நிதியாண்டில், 9- – 11 சதவீதம்; நீண்ட கால அடிப்படையில், 10 – -12 சதவீத வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.பல வாகன நிறுவனங்கள், உள்நாட்டில்தயாரிக்கப்படும் உதிரி பாகங்களை, அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளன. அத்துடன், உதிரி பாகங்கள் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அதனால், நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில், வாகன துறையை விட, வாகன உதிரி பாகங்கள் துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.உள்நாட்டு வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில், 28 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதில், 60 சதவீதம்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.வாகன உதிரி பாகங்கள் துறையின் மொத்த விற்றுமுதலில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 48 நிறுவனங்களின் பங்கு, 25 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனங்களின் விற்றுமுதல், நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது.உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கான, உதிரி பாகங்கள் தேவை அதிகரித்து வருகிறது. இத்தேவையில், இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணியர் கார்களின் பங்களிப்பு, மூன்றில் இரு பங்காக உள்ளது. நடப்பு நிதியாண்டில், இது மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உற்பத்தி, முறையே, 6.9 சதவீதம் மற்றும் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிராக்டர் உற்பத்தி, 15.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, வர்த்தக வாகனங்களின் தயாரிப்பு சரிவடைந்ததால் ஏற்பட்ட தாக்கத்தை குறைக்க உதவி உள்ளது.பருவமழை பொழிவால், விவசாயிகள்உள்ளிட்ட, கிராமப்புற மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், இருசக்கர வாகனம், டிராக்டர், இலகுரக வர்த்தக வாகனங்கள் ஆகிய மூன்று பிரிவுகளுடன், உதிரி பாகங்கள் துறையும் வளர்ச்சி காணும்.ஐரோப்பிய சந்தைக்கான பயணியர் கார் மற்றும் வர்த்தக வாகன ஏற்றுமதி, ஓராண்டில், சிறிதளவு உயர்ந்துள்ளது. இதே நிலை, சிறிது காலத்திற்கு நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்திய வாகன உதிரி பாகங்கள் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|