பதிவு செய்த நாள்
15 செப்2017
23:51
மும்பை : ‘இந்திய வங்கிகளின் சொத்து மதிப்பிற்கு, வாராக்கடன் பிரச்னை தொடர்ந்து சவாலாக இருக்கும்’ என, தர நிர்ணய நிறுவனங்களான, ‘பிட்ச், கிரிசில்’ ஆகியவை எச்சரித்து உள்ளன.
இது குறித்து, ‘பிட்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய வங்கிகளின் வாராக்கடன் பெருகி வரும் நிலையில், அவற்றின் வருவாய் வளர்ச்சி குறைந்து வருகிறது. மின் துறை கடன்களை திரும்ப பெறுதல், விவசாய கடன் தள்ளுபடி, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் போன்ற தொடர் பிரச்னைகளை, வங்கிகள் சந்திக்க நேரும். இதனால், அடுத்த ஓராண்டில், வங்கிகளுக்கு, சொத்து மதிப்பை தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருக்கும். வங்கி துறைக்கு, 2019 மார்ச் இறுதிக்குள், ‘பேசல் 3’ விதிகளின்படி, கூடுதலாக, 6,500 கோடி டாலர் தேவை; இதில், பொதுத் துறை வங்கிகளுக்கு மட்டும், 90 சதவீதம் தேவைப்படும்.
தற்போது, வங்கி துறையின் பலவீனமான மூலதனம், கடன்களில் உள்ள இடர்ப்பாடு, கடன் வளர்ச்சி தொடர்ந்து சரியும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், வங்கி துறையின் கடன் தகுதி மதிப்பீடு, எதிர்மறை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
‘கிரிசில்’ அறிக்கை:
வங்கிகளின் வாராக்கடன் விகிதம், 9.5 சதவீதமாக உள்ளது. இது, 2018 மார்ச்சில், 1 சதவீதம் உயர்ந்து, 10.5 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வகையில், வங்கிகளின் பதிவேட்டில், மொத்தம், 11.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, கடன் நெருக்கடி இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இக்கடன்களுக்கு, திவால் சட்டம் உள்ளிட்ட வழிகளில், வங்கி துறை உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|