பதிவு செய்த நாள்
17 செப்2017
03:48
புதுடில்லி : கடந்த ஆகஸ்ட் மாதம், நாட்டின் ஏற்றுமதி, 10.29 சதவீதம் உயர்ந்து, 2,381 கோடி டாலராக உயர்ந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு பின், டாலர் அடிப்படையிலான ஏற்றுமதி, மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.'கடந்த 2016 செப்., முதல், ஏற்றுமதி தொடர்ந்து, 12 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது' என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், ரசாயனங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை, ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளன.பொறியியல் சாதனங்கள்ஆகஸ்டில், ரசாயனங்கள் ஏற்றுமதி, 32.41 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுபோல பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியும், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இத்துறையின் ஏற்றுமதி, 36.56 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 19.53 சதவீதம் அதிகரித்துள்ளது.அதேசமயம், கைவினைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைகள், ஏற்றுமதி வளர்ச்சியில், பின்னடைவைக் கண்டுள்ளன.நடப்பு 2017 - 18ம் நிதியாண்டின், ஏப்., - ஆக., வரையிலான ஐந்து மாதங்களில், ஏற்றுமதி, 8.57 சதவீதம் அதிகரித்து, 11,857 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதியும், 26.63 சதவீதம் உயர்ந்து, 18,171 கோடி டாலராக ஏற்றம் கண்டுள்ளது. இதனால், வர்த்தகப் பற்றாக்குறை, 6,314 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இறக்குமதிகடந்த ஆகஸ்டில், நாட்டின் இறக்குமதி, 21.02 சதவீதம் அதிகரித்து, 3,546 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2,930 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், வர்த்தக பற்றாக்குறை, 770 கோடி டாலரில் இருந்து, 1,164 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இறக்குமதி, 69 சதவீதம் உயர்ந்து, 188 கோடி டாலராக அதிகரித்ததே, இதற்கு காரணம்.'நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து, 12 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருவது, பல்வேறு துறைகளுக்கு சாதகமான அம்சமாக உள்ளது' என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கவலை அளிக்கிறதுஏற்றுமதி வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஜி.எஸ்.டி., திட்டத்தின் கீழ் முன்கூட்டிய வரி செலுத்துவதால், நடைமுறை மூலதனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்றுமதியாளர்கள் புதிய, 'ஆர்டர்'கள் எடுப்பதை நிறுத்தியுள்ளனர். ஜூலை முதல் செலுத்திய வரி எப்போது திரும்பக் கிடைக்கும் என, உறுதியாக தெரியவில்லை. இந்த பிரச்னையுடன், ரூபாய் மதிப்பு உயர்வு, சர்வதேச நிலவரம் போன்ற அம்சங்கள், அக்டோபர் மாத ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவலை அளிக்கிறது.கணேஷ் குப்தா,தலைவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|