பதிவு செய்த நாள்
18 செப்2017
00:12
சர்வதேச நிறுவனங்களின் அவுட்சோர்சிங் மூலம் வளர்ச்சி அடைந்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இன்சோர்சிங் புதிய சவாலாக உருவாகியிருக்கிறது.
தேசிய பங்குச்சந்தையில் ஐ.டி துறை பங்குகள் குறியீடான நிப்டி, ஐ.டி., இந்த ஆண்டு சந்தையின் ஒட்டுமொத்த குறியீட்டை விட, 22 சதவீதம் குறைவான பலனை அளித்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இது, 10 சதவீதம் குறைந்த பலனை அளித்திருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி தேக்கம்அடைந்துள்ள நிலையில் இந்த தகவலில் எந்த வியப்பும் இல்லை தான். விசா கட்டுப்பாடு சிக்கல், ‘டிஜிட்டல்’ மயமாக்கல் சவால், தானியங்கிமயமாக்கல் என, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சி வேகம் தடைபட்டுள்ளது.
புதிய சவால்:
இந்த சிக்கல்கள், ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சியை பாதித்திருப்பதோடு, இத்துறையின் வேலைவாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் மீதும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய ஐ.டி., துறை அவுட்சோர்சிங் மூலம் தான் பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. ஆனால் அமெரிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்கள் நாட்டு வேலைவாய்ப்பு வெளியே செல்வதை தடுக்கும் வகையில் கொள்கை முடிவுகளை எடுத்து வருவது அமெரிக்க சந்தையை சார்ந்திருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு, பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பின்னணியில் இந்திய, ஐ.டி., துறை நிறுவனங்களுக்கு இன்சோர்சிங் மூலம், புதிய சவால் உருவாகி வருவதாக, ‘நொமுரா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இந்திய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் பல, இன்சோர்சிங் முறையை நாடுவதாக தெரிவித்துள்ளது. ‘இன்சோர்சிங்; நெக்ஸ்ட் பிக் ஒரி பார் இந்தியா’ எனும் பெயரில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நிறுவனங்கள் தங்கள் பணிகளை, வெளி நிறுவனங்களிடம் ஒப்படைத்து நிறைவேற்றிக் கொள்வது, ‘அவுட்சோர்சிங்’ என குறிப்பிடப்படுகிறது. இதற்கு மாறாக சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பணிகளை உள்ளுக்குள்ளேயே நிறைவேற்றிக் கொள்வது இன்சோர்சிங் என குறிப்பிடப்படுகிறது.
வளர்ச்சி பாதிப்பு:
பொதுவாக சர்வதேச நிறுவனங்கள், ஜி.ஐ.சி., எனப்படும் குளோபல் இன்ஹவுஸ் சென்டர்களை அமைப்பதன் மூலம், இதை செயல்படுத்துகின்றன. அதாவது பணிகளை பிற நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், தாங்களே மையங்கள் அமைத்து, அதில் ஊழியர்களை அமர்த்தி தங்களுக்கு தேவையான சேவைகளை உருவாக்கி கொள்கின்றன. சர்வதேச நிறுவனங்கள் இத்தகைய சொந்த மையங்களை அமைப்பதில் கவனம் செலுத்தி வருவதால், இந்திய நிறுவனங்களுக்கான அவுட்சோர்சிங் வாய்ப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த மையங்கள், இந்திய ஐ.டி., துறைக்கான அடுத்த பெரிய சவால் என, நொமுரா அறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது, இந்த மையங்கள் சர்வதேச அவுட்சோர்சிங் வருவாயில், 25 சதவீதத்தை ஈர்க்கின்றன. ஆனால், இவை இந்திய அவுட்சோர்சிங் துறையை விட அதிகமாக வளர்ச்சி பெறத் துவங்கியுள்ளன. இதற்கு முன், இந்த மையங்களை விட இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் அதிக வளர்ச்சி விகிதம் கண்டு வந்தன.
வேலை வாய்ப்பு:
இப்படி மையங்களை அமைப்பது, மிகப்பெரிய நிறுவனங்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், ஆண்டுக்கு 5 பில்லியனுக்கும் குறைந்த வருவாய் கொண்ட நிறுவனங்கள் மத்தியிலும், பரவலாகி வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. வழக்கமான வங்கி, நிதி மற்றும் காப்பீடு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு வெளியேவும் இந்த போக்கு பிரபலமாகத் துவங்கியுள்ளது. ஜி.ஐ.சி., மையங்களை அமைப்பது செலவு மிக்கது என்றாலும், தங்கள் பணிகள் மீது அதிக கட்டுப்பாடு மற்றும் புதுமையை பெற விரும்பி, சர்வதேச நிறுவனங்கள் இந்த முறையை நாடுவதாக கருதப்படுகிறது.
புதுமையான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இந்த சவாலை எதிர்கொள்ளலாம் என்றாலும், இதற்கான முதலீடு லாப விகிதத்தை பாதிக்கும் என கருதப்படுகிறது.இன்சோர்சிங் இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்திருந்தாலும், இந்த மையங்களும் புதியவர்கள் மற்றும் அனுபவசாலிகளை பணிக்கு அமர்த்தி வருவதால், இவை புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிலை உள்ளது.
இன்சோர்சிங் சவால்:
* அவுட்சோர்சிங் வருவாயில், 25 சதவீதத்தை, ஜி.ஐ.சி., மையங்கள் பெறுகின்றன.* வரும் ஆண்டுகளில் மேலும் பல முக்கிய நிறுவனங்கள் இன்சோர்சிங் முறைக்கு மாறலாம்.* இன்சோர்சிங் மையங்கள் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|