பதிவு செய்த நாள்
27 செப்2017
08:14
புதுடில்லி : ‘‘இணைப்பு கட்டண குறைப்பு குறித்து, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், நியாயமற்ற வகையில் சேற்றை வாரி இறைப்பது, வேதனை அளிக்கிறது,’’ என, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தலைவர், ஆர்.எஸ்.சர்மா தெரிவித்து உள்ளார்.
ஒரு மொபைல் போன் அழைப்பில், வேறு நிறுவனத்தின் சேவையை பெறுவதற்கு, இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிறுவனங்கள் இடையிலான இந்த கட்டணம், நிமிடத்திற்கு, 14 காசுகளில் இருந்து, 6 காசுகளாக குறைக்கப்பட்டு உள்ளது. இது, அக்., 1 முதல், அமலுக்கு வருகிறது. இதையடுத்து, 2018 ஜன., 1 முதல், இக்கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மொபைல் போன் நிறுவனங்கள், இத்திட்டத்தின் பயனை, வாடிக்கையாளருக்கு வழங்கும்பட்சத்தில், அழைப்பு கட்டணம் குறையும். ஆனால், ‘முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனத்திற்கு சாதகமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது’ என, பார்தி ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி உள்ளன. ஏனெனில், இந்நிறுவனங்கள் அவற்றின் மொத்த வருவாயில், 9 – 10 சதவீதத்தை, இணைப்பு கட்டணம் மூலம் பெறுகின்றன.
இக்கட்டணம் குறைக்கப்பட்டால், அவற்றின் வருவாய் குறையும். குறிப்பாக, ஆர்ஜியோவிடம் பெறும் தொகை குறையும். அதே சமயம், துவக்கம் முதல், இலவச அழைப்புகளை வழங்கி வரும் ஆர்ஜியோவுக்கு, இணைப்பு கட்டண செலவு மிச்சமாகும். ஏற்கனவே, ஆர்ஜியோவின் போட்டியால், வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில், கட்டண செலவும் மிச்சமானால், போட்டி மேலும் அதிகரிக்கும் என, இதர நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இதனால், இணைப்பு கட்டண குறைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்நிலையில், ‘டிராய்’ தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: வெளிப்படையான முறையில், அழைப்புகளை கையாளும் கட்டணம் கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த விபரங்களை, யார் வேண்டுமானாலும் ஆராயலாம். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஆக்கபூர்வமான விமர்சனங்களை, நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சில விமர்சனங்கள் எல்லை தாண்டி உள்ளன. அவை, அமைப்பின் நேர்மை மற்றும் ஒருங்கிணைப்பு குறித்தும், அமைப்பில் அங்கம் வகிப்போரின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புகின்றன; அது, சரியல்ல; சேற்றை வாரி இறைக்கும் செயல்.
நீதிமன்றம், மத்தியஸ்தர் அல்லது ஒழுங்குமுறை ஆணையம் போன்று முடிவுகள் எடுக்கும்பட்சத்தில், அது, வெவ்வேறு தரப்பினரிடம், மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இணைப்பு கட்டணம், லாபம் குவிப்பதற்கான வழியாக மாறக் கூடாது என்பதில், ‘டிராய்’ உறுதியாக உள்ளது. அதனடிப்படையில் தான், கணக்கீடுகள் செய்யப்பட்டு, விபரங்களை வெளிப்படையாக வெளியிட்டு உள்ளோம். யாருடைய மனதிலும், எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கக் கூடாது என்ற நோக்கத்தில், ஒளிவுமறைவின்றி தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதனால், தரம் தாழ்ந்த கருத்து பகிர்வு, மனதை புண்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|