பதிவு செய்த நாள்
03 அக்2017
00:29
புதுடில்லி : நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான, முதல் அரையாண்டில், பல்வேறு நிறுவனங்கள், ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 27 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டி, சாதனை படைத்துள்ளன. இதற்கு முன், 2007 – 08ம் நிதியாண்டின், முதல் அரையாண்டில், 21,244 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே, சாதனையாக இருந்தது.
பங்குச் சந்தைகளின் எழுச்சி, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மதிப்பீட்டு காலத்தில், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, முதலீடுகளுக்கு சிறந்த வருவாயை வழங்கி உள்ளது. இது போன்ற காரணங்களால், காப்பீடு, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு, ‘கேபிள் டிவி’ என, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில்,ஆர்வமுடன் களமிறங்கி வருகின்றன. அவை, வர்த்தகத்தை விரிவு படுத்தவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதன தேவைகளை சமாளிக்கவும், பங்கு வெளியீடு மேற்கொள்கின்றன.
‘‘விரைவில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட், எச்.டி. எப்.சி., ஸ்டாண்டர்டு லைப் இன்சூரன்ஸ் உட்பட, 12 நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொண்டு, 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட உள்ளன,’’ என, 5நான்ஸ் டாட் காம் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, தினேஷ் ரோஹிரா தெரிவித்து உள்ளார்.
நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டில், 19 நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு, 26,720 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 15 நிறுவனங்கள், 16,535 கோடி ரூபாய் திரட்டி இருந்தன; இது, 2007 – 08ம் நிதியாண்டின், இதே காலத்தில், 21,244 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|