பதிவு செய்த நாள்
09 அக்2017
00:07
உலகெங்கும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் துறைகளில் ஒன்று, மனை வணிகம். இந்தியாவில் அத்துறையை மீண்டும் பொலிவு பெறச் செய்து, அதன்மூலம் வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் பெருக்க, மத்திய ரிசர்வ் வங்கியும் அரசும் எடுத்து வரும் முயற்சிகள், நம் கவனத்தைக் கவருகின்றன.
அடுக்ககங்களையோ மனைகளையோ வாங்குவதற்கு முதலில் மக்களிடம் போதிய நிதி வசதி தேவை. இதற்கு, மத்தியமர்களும் மாதச் சம்பளக்காரர்களும் நம்பியிருப்பது வங்கிக் கடன்களையே. வங்கிக் கடன்களோ பல்வேறு சிக்கல்களில். முக்கியமாக அதன் வட்டி விகிதம்.
குறைந்த வட்டி விகிதம்:
அமெரிக்காவில், 30 ஆண்டுகளுக்கான நிலையான வட்டி விகிதம், 3.83 சதவீதம். 15 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 3.13 சதவீதம். நியூசிலாந்திலோ 3.87 சதவீதம். இங்கிலாந்திலும் வட்டிவிகிதம் குறைவே. ஆனால், இந்தியாவிலோ, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையில் வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமே, 8.35 சதவீதம். இத்தனைக்கும் மத்திய ரிசர்வ் வங்கி, தனியார் வங்கிகளுக்கு வழங்கும் தொகைக்கான வட்டி விகிதமான ‘ரெப்போ’ விகிதத்தைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகப் போய்ச்சேர வேண்டும், அவர்கள் பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறைய வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் எண்ணம். வங்கிகளோ, இந்தப் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதம் செய்கின்றன அல்லது குறைந்த அளவே வழங்குகின்றன.
பர்சனல் லோன்:
வங்கிகள் பல்வேறு பிரிவினருக்கு கடன்கள் வழங்குகின்றன. அவற்றில் ‘பர்சனல் லோன்’ எனப்படும் தனிநபர் கடன் மட்டும் 22 சதவீதம். இதிலும் பெரும்பான்மை, வீட்டுக் கடன் தான். இந்தப் பிரிவினர் மட்டும் தான் நியாய, தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வட்டியும் முதலும் ஒழுங்காகச் செலுத்தக்கூடியவர்கள். இவர்களிடையே ‘வாராக்கடன்’ பிரச்னை வாரா. இவர்களுக்கு வயிற்றில் பாலை வார்க்கும்விதமாக, ரிசர்வ் வங்கியின் ஆய்வுக் குழுவொன்று நல்ல ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம் கூடாது:
கடன்களுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும்போது, வங்கிகள், கருவூல பில்களின் விகிதம் அல்லது குறுகிய கால கடன்களுக்கான விகிதம் அல்லது மத்திய வங்கியின் ரெப்போ விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பது இக்குழுவின் கருத்து. இந்த விகிதங்களும் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இப்போது இது ஓராண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறது. ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியவர்கள், பழைய ‘பேஸ் ரேட்’ வட்டி விகிதத்திலிருந்து, எம்.சி.எல்.ஆர். வட்டிவிகிதத்துக்கு மாறும்போது, கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது.
எம்.சி.எல்.ஆர்., என்ற புதிய முறையிலான வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஏப்ரல் 2016 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைப் பின்பற்றும்போது, வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம் குறையும். ‘பேஸ் ரேட்’டிலிருந்து எம்.சி.எல்.ஆர்.,க்கு மாறுவதற்கு இறுதி தேதி எதுவும் குறிக்கப்படாததால், வங்கிகள் மிக மெதுவாகவே, மாற்றங்களைச் செய்து வருகின்றன. இதனால், ரிசர்வ் வங்கி விரும்பும் பலன், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கவில்லை. மத்திய ரிசர்வ் வங்கி ஆய்வுக்குழு ஆலோசனைகளுக்குப் பின், இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
நிதிச்சுமை குறைவு:
மேலும், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் முதன் முறையாக வீடு வாங்கினால் வீட்டுக் கடனுக்கான வட்டியில் குறிப்பிட்ட சதவீதம், மானியமாக வழங்கப்படும். டிசம்பர் – 2018 உடன் முடிவதாக இருந்த மானியத் திட்டம், மார்ச் – 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மற்றொரு முக்கிய முன்னேற்றம்.வட்டி மானியத்தின் மூலம், முதல்முறை வீடு வாங்குவோரது நிதிச்சுமை ஓரளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. அரசாங்கம் செயல்படுத்தும் மற்றொரு திட்டம், மலிவுவிலை வீட்டுவசதி. இதற்காக, அரசு நிலத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கட்டடங்கள் கட்டுவதற்கான ஆறு திட்ட மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வீட்டுவசதியை மேம்படுத்த, மேலும் ஒரு வழிமுறையை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, 10 லட்சம் பேருக்கு மேல் வசிக்கக்கூடிய 53 இந்திய நகரங்களில் உள்ள ப்ளோர் ஸ்பேஸ் இன்டெக்சை (எப்.எஸ்.ஐ.) மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒற்றைச்சாளர முறை:
மனையின் அளவைப் பொறுத்து, அதன் மீது எத்தனை சதுர அடி கட்டடம் கட்டப்படலாம் என, வரையறுக்கும் விகிதமே எப்.எஸ்.ஐ., பல நகரங்களில் இந்த விகிதம் வெகு குறைவாக உள்ளது. இதை மாற்றியமைப்பதன் மூலம், இருக்கக்கூடிய சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான அடுக்ககங்கள் எழுப்பப்படலாம். அரசு மட்டுமல்லாமல், வங்கிகளும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை மேம்படுத்த முயன்று வருகின்றன. ஒரு வங்கி, முதல் 12 மாதாந்திர தவணைத் தொகையை தள்ளுபடி செய்ய, மற்றொரு வங்கி, மொத்த கடனில் ௧ சதவீததொகையை கேஷ் பேக்காக வழங்க முன் வந்திருக்கிறது. இன்னொரு நிறுவனம் மறைமுக கட்டணங்கள் அத்தனையையும் ஒழித்துவிட, இன்னொரு வங்கி, பிராசஸிங் கட்டணத்தைக் குறைத்துவிட்டது.
இவை போதுமா? போதாது. பதிவுக் கட்டணங்கள் பல மாநிலங்களில் மிக அதிகம். அதைக் குறைக்க வேண்டும் என்பதோடு, கட்டடங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் ஒற்றைச்சாளர முறை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. ‘வரப்புயர... கோன் உயர்வான்’ என்பது அவ்வையின் பழம்பாடல். இப்போது, ‘கடன் பெருக... நாடு உயரும்’ என்பதே பொருளாதார புதுமொழி.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|