பதிவு செய்த நாள்
16 அக்2017
00:05
அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்களில், முதலீடு செய்யும் வழிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதால், இவை, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்புடையதாக அமையும் என கருதப்படுகிறது.
காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், தங்க சேமிப்பு பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை, ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில், அடுத்த கட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.பொதுவாக, தங்க பத்திரங்களில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு, அடுத்த வெளியீடு வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறை, ‘ஆன் டேப்’ என சொல்லப்படும் முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், டிசம்பர் மாதம், 27ம் தேதி வரை முதலீடு செய்யலாம். கடந்த, 9ம் தேதி வெளியீடு துவங்கியது.
இவற்றில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல், புதன் கிழமை வரை முதலீடு செய்யலாம். இதன் படி, வரும், 16 முதல், 18 வரை, இந்த வாரம் பத்திரங்களை வாங்கலாம். பத்திரங்களின் விலை, அந்த வார துாய தங்கத்தின் சராசரி விலைக்கேற்ப அமையும். பின், இரண்டு வாரங்கள் கழித்து இவை, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். இந்த காலம் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பது முக்கியமாகும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த வாய்ப்பு ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. இ.டி.எப்.,களை திட்டமிட்டு வாங்குவது போலவே தங்க பத்திரங்களையும் வாங்கலாம்.
வழக்கமாக, அறுவடை முடிந்து, விவசாயிகள் தங்கம் வாங்கும் காலமாகவும் இது அமைகிறது. மேலும், ஓராண்டில் அதிகபட்ச முதலீடு, 500 கிராமில் இருந்து, 4 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளுக்கு இது, 20 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 9ம் தேதி வெளியான போது இவற்றின் விலை கிராமுக்கு, 2,956 ரூபாயாக இருந்தது. இந்த மாற்றங்கள் காரணமாக, தங்க சேமிப்பு பத்திரங்கள் மேலும் ஈர்ப்புடையதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|