பதிவு செய்த நாள்
16 அக்2017
00:07
பொருத்தமான நிதி சாதனங்களில் முதலீடு செய்ய வேண்டும். அவை, நிதி இலக்கிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதையும், தொடர்ந்து சீராக முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் அறிந்திருப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான வளத்தை உருவாக்கிக் கொள்ள இது தான் அடிப்படை. ஆனால், இது மட்டும் போதுமா? முதலீட்டில் இன்னொரு முக்கியமான உத்தியை கடைபிடிப்பது அவசியம் தெரியுமா? அது, முதலீட்டை போகப் போக அதிகமாக்குவதாகும்.
கிரிக்கெட் உத்தி:
கிரிக்கெட் போட்டிகளில் நல்ல துவக்கம் அமைந்த பின், ரன் குவிப்பு வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே செல்வதை ஒரு உத்தியாக பின்பற்றுகின்றனர் அல்லவா? அதே போல, முதலீட்டிலும் அவ்வப்போது முதலீட்டு தொகையை உயர்த்திக் கொண்டே செல்வது அவசியம். வைப்பு நிதி முதலீடோ, எஸ்.ஐ.பி., மூலமான, ‘மியூச்சுவல் பண்ட்’ முதலீடோ, அவை, முதலீட்டாளர்களின் வருமான உயர்வு, பணவீக்கம் மற்றும் முதலீட்டு இலக்கிற்கு ஏற்ப ஈடு கொடுக்க முதலீட்டுத் தொகையை அதிகரிப்பது முக்கியம்.
ஏன் அவசியம்?
முதலீட்டை துவக்கும் போது அப்போதைய வருமானம் மற்றும் பொருளாதார சூழலுக்கு ஏற்பவே முதலீட்டின் தொகை அமைந்திருக்கும். உதாரணத்திற்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒருவர் மாதம், 2,000 ரூபாயை முதலீடு செய்திருக்கலாம். அப்போது, ஒரு நிதி இலக்கும் இருந்திருக்கும். ஆனால், அதன் பிறகு அவர் வருமானமும் அதிகரித்திருக்கும்; தேவைகளும் அதிகரித்திருக்கும். எனவே, அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முதலீட்டை, 5,000 ரூபாய் என உயர்த்த வேண்டும்.
பணவீக்கம்:
பொதுவாக நிதி முடிவுகளை எடுக்கும் போது பலரும் திரும்ப கிடைக்கும் பலன், வரி சேமிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்கின்றனரே தவிர, பணவீக்கத்தை மறந்து விடுகின்றனர். பணவீக்கம் வாங்கும் சக்தியை பாதிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன், 100 ரூபாய் என்பது இப்போது, 29 ரூபாய் மதிப்பு கொண்டதாகவே இருக்கும். எனவே, பணவீக்கத்திற்கு முதலீட்டின் பலன் ஈடு கொடுக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டுத் தொகையை உயர்த்துவது அவசியம்.
என்ன பலன்?
முதலீட்டை தொடர்வது போலவே ஒவ்வொருவர் சூழலுக்கு ஏற்ப அதற்கான தொகையை அதிகரிப்பதும் முக்கியமானது. நீண்ட கால நோக்கில் வளத்தை உருவாக்கிக் கொள்ள இது உதவும். அதிலும், குறிப்பாக ஓய்வு கால முதலீடு போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு இது அதிகம் பொருந்தும். மேலும், ஒருவரின் முதலீட்டு இலக்குகளுக்கும் ஈடுகொடுக்க இது அவசியம்.
எப்படி செய்வது?
முதலீட்டை அதிகரிப்பதை பலவிதங்களில் செய்யலாம். முதலில் இதற்கான தெளிவாக இலக்கு தேவை. உதாரணத்திற்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் முதலீடு செய்தால், அதை இரண்டு ஆண்டுகளுக்கு பின் இரட்டிப்பாக்க வேண்டும் என தீர்மானித்து அதற்கேற்ப செயல்படலாம். மியூச்சுவல் பண்ட்களுக்கான எஸ்.ஐ.பி., வழி எனில், சில ஆண்டுகளில் தொகையை அதிகரிக்கும்படி, நிதியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|