பதிவு செய்த நாள்
26 அக்2017
00:52
புதுடில்லி : ‘வாராக்கடனில் சிக்கியுள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதன திட்டம், நாட்டின் வருங்கால பொருளாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட மகோன்னதமுயற்சி’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.
ஜூன் நிலவரப்படி, பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, 39 வங்கிகளின் வாராக்கடன், 8,29,338 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளின் பங்கு, ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இவ்வங்கிகள், வாராக்கடனுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டி உள்ளதால், அவற்றின் சொத்து மதிப்பு குறைந்து வருகிறது.அதனால், வங்கிகள் புதிய கடன்களை தாராளமாக வழங்க முடியாத நிலையில் உள்ளன. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ‘பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்த, அடுத்த இருஆண்டுகளில், 2.11 லட்சம் கோடி ரூபாய், பங்கு மூலதனமாக வழங்கப்படும்’ என, நேற்று முன்தினம், மத்திய அரசு அறிவித்தது.
சவால்:
இதை பாராட்டி, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டம், இந்திய வங்கித் துறைக்கு புத்துயிரூட்டும். நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தை பாதுகாக்க, நினைவு கூறும் நடவடிக்கை இது எனலாம். வங்கித் துறையின் சவால்களை சமாளிக்க, அவ்வப்போது, கொள்கைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், 10 ஆண்டுகளில், முதன்முறையாக, அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கான, ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான கொள்கை அறிவிப்பு, தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
பயன்கள்:
வலுவான பங்கு மூலதனம் உள்ள வங்கிகளும், அவற்றின் சீரிய செயல்பாடுகளும் தான், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகும். இந்த வகையில், மத்திய அரசு சரியான தருணத்தில், ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு பயன்கள் கிடைக்கும். மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம், வங்கிகளில் பணப்புழக்கம் பெருகும். பொதுத் துறை வங்கி பங்குகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு அதிகரிக்கும்.
அடுத்து, சிறந்த நிதிச் செயல்பாடுகளுடன், விரைந்து கடன் வழங்க, புதிய பங்கு மூலதனத்தை பயன்படுத்தும் வங்கிகளுக்கு, முன்னுரிமை அந்தஸ்து கிடைக்கும். வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி சார்பாக வரவேற்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வங்கி ஊக்குவிப்பு திட்டம்
* வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கப்படும்
எப்படி திரட்டப்படும்?
* பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18 ஆயிரம் கோடி ரூபாய்
* மறுபங்கு முதலீட்டு கடன் பத்திரங்கள் மூலம், 1.35 லட்சம் கோடி ரூபாய்
* வங்கிகளில், மத்திய அரசின் பங்கு விற்பனை மூலம், 56 ஆயிரம் கோடி ரூபாய்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|