பதிவு செய்த நாள்
27 அக்2017
23:41
மும்பை : ‘விர்ச்சுவல் கரன்சி பரிவர்த்தனைக்கு, இந்தியாவில் அனுமதியில்லை. இவ்வகை கரன்சியில் நடைபெறும் முறைகேடான வர்த்தகம், முதலீடுகள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியாது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
‘விர்ச்சுவல் கரன்சி’ எனப்படும், மெய்நிகர் கரன்சிகளின் பரிவர்த்தனைகள், இணையத்தில் மட்டுமே நடக்கின்றன. ‘பிட்காய்ன், எரித்ரியா’ போன்ற, பல வகையான மெய்நிகர் கரன்சிகள், இணையத்தில் புழங்குகின்றன.
மதிப்பு கிடையாது:
தனியார் நிறுவனங்கள் வெளியிடும் இந்த வகை கரன்சிகளுக்கு, சட்டபூர்வ மதிப்பு கிடையாது. இந்த கரன்சிகளின் பரிவர்த்தனையை கட்டுப்படுத்த, எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை. இருந்த போதிலும், சில ஆண்டுகளாக, வலைதளங்களில், ‘பிட்காய்ன்’ போன்ற, அங்கீகாரமற்ற மின்னணு கரன்சிகளில், முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வலைதளங்களில், இவ்வகை கரன்சிகள் மீதான, வர்த்தகப் பரிவர்த்தனைகளும் நடக்கின்றன. மேலும், மெய்நிகர் கரன்சிகளுக்கு என, தனியே, ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த, மின்னணு பணப் பைகளில் சேமிக்கப்படும் மெய்நிகர் கரன்சிகள், வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
‘இந்த கரன்சிகளில் செய்யும் முதலீடுகள், பரிவர்த்தனைகள் ஆகியவை ஆபத்தானவை; எத்தகைய இடர்ப்பாடு ஏற்பட்டாலும், அது, இத்தகைய கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரையே சாரும்’ என, ரிசர்வ் வங்கி, ஏற்கனவே எச்சரித்துள்ளது. இத்தகைய மெய்நிகர் கரன்சிகள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பயன்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.
இழப்பு:
இந்நிலையில், சமூக வலைதளம் ஒன்று, தகவலறியும் உரிமை சட்டத்தில், ரிசர்வ் வங்கியிடம், சில விபரங்களை கோரி இருந்தது. அதில், ‘இந்தியாவில், மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதா? இல்லையென்றால், இத்தகைய கரன்சிகள் மூலம், முறைகேடாக வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?’ என்பது உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
அதற்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்: இந்தியாவில், ‘பிட்காய்ன், எரித்திரியா’ உள்ளிட்ட, எந்தவொரு மெய்நிகர் கரன்சிகளையும், வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்படவில்லை. இந்த கரன்சிகள் மூலம், சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியாது. இந்த மெய்நிகர் கரன்சிகளில் முதலீடு செய்வோர், கரன்சி மீதான வர்த்தகம் நடைபெறும் சந்தைகள் குறித்த தகவலும், வங்கியிடம் இல்லை.
இந்த மெய்நிகர் கரன்சிகளை வைத்திருப்போர், பயன்படுத்துவோர், முதலீடு செய்வோர் அல்லது வர்த்தகம் புரிவோர், அவரவர் சொந்த பொறுப்பிலேயே செய்வதாக கருதப்படும். இந்த மெய்நிகர் கரன்சிகள், ஊக மதிப்பு கொண்டவை. இந்த கரன்சிகளை பயன்படுத்துவோர், பெரும் இழப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|