பதிவு செய்த நாள்
30 அக்2017
01:09
ஆதார் எண்ணோடு மொபைல்போன் எண்ணை, வங்கிக் கணக்கை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசுதெரிவிக்கும்போது, கடுமையான அதிருப்தி. ஆதார் அடையாள அட்டையால் கிடைக்கக்கூடிய பலன்களைவிட, தனியுரிமைக்குப் பெரிய பாதிப்பு என்று நீதிமன்றம் சென்றவர்கள் உண்டு. தனிமனிதர்களை அரசு வேவு பார்க்கிறதா என்ற கேள்வி வேறு!
சீனாவில் நடைபெற்றுவரும் ஒரு முயற்சியை நம் முயற்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதிகள் என்பது புரியும். சீனாவை ஆட்சி செய்துவரும் மத்திய குழு, ஓர் அறிக்கையை வெளியிட்டது. சீனாவில் உள்ள ஒவ்வொரு மனிதரையும் கணிக்கும், ‘சமூக மதிப்பு அளவீட்டு எண்’ என்பதை உருவாக்குவதே, அந்த அறிக்கையின் அடிப்படை. அதாவது, நம் நாட்டில், வங்கிகளில் கடன் பெற, நம் கடன் பெறும் திறனை அளவீடு செய்ய, ‘கிரெடிட் ரேட்டிங் ஸ்கோர்’ என்று ஒன்று உண்டு. நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரியான தேதியில், வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் தொகைகளைச் செலுத்துகிறீர்களா என்பதை அளவீடு செய்து, உங்களுக்கு ஓர் ஸ்கோர் வழங்கப்படும். அதிக புள்ளி இருப்பவர்களுக்கு குறைந்த வட்டியில் கூடுதல் கடன் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
ஏன் இந்த அளவீடு:
இதன் தொடர்ச்சி தான், சீனாவின் சமூக மதிப்பு அளவீட்டு எண். இப்போதைக்கு இந்த அளவீட்டு எண்ணை சீன மக்கள் விருப்பத்தின் பேரில் பெற்றுக்கொள்ளலாம். 2020 முதல் இது கட்டாயம்.ஏன் இந்த அளவீடு? மக்களுடைய நம்பகத்தன்மையை கணித்து, தேசிய அளவில் அதை உயர்த்துவதோடு, நேர்மையையும் வலுவடையச் செய்ய வேண்டுமாம். 1.3 பில்லியன் மக்கள்தொகை உள்ள நாட்டில் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் எப்படி உயர்த்துவது?அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் கண்காணிப்பதன் மூலம், வர்த்தக, நிதி பரிமாற்றங்களை அளவிடுவதன் மூலம், அவர்களுடைய சமூக வலைதள பங்களிப்புகளை கணிப்பதன் மூலம், சமூக மதிப்பு அளவீடு நடைபெற இருக்கிறது.
சீன அரசு, எட்டு நிறுவனங்களுக்கு, மக்களின் நடவடிக்கைகளை கணித்து வழங்குவதற்கான லைசென்சை வழங்கியுள்ளது. இதில் முக்கியமானது இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான செஸ்மே கிரேடிட் என்பது. மக்களுடைய செயல்பாடுகள் தனித்தனியே மதிப்பிடப்பட்டு, 350 முதல், 900 புள்ளிகள் வரை வழங்கப்படுகின்றன. அவர்களுடைய நடவடிக்கைகள் ஐந்து பிரிவுகளின் கீழ் அளவிடப்படுகின்றன. முதலில், கட்டணங்கள், கடன்கள் உரிய தேதியில் செலுத்துகிறாரா? இரண்டு, அவரால் சொன்ன தேதியில் கடன்களைச் செலுத்தும் சக்தி இருக்கிறதா? மூன்று, அவரது தனிப்பட்ட விபரங்களான தொலைபேசி எண்கள், முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல். நான்காவதில் இருந்து தான், மக்களின் மனோபாவங்கள் அறியப்படுகின்றன.
ஷாப்பிங் பழக்கம்:
குறிப்பாக ஷாப்பிங் பழக்கவழக்கங்கள் என்ன? அவர்கள் வாங்கும் பொருட்களிலிருந்து குணாதிசயம் நிர்ணயிக்கப்படுவதாக செஸ்மே கிரெடிட் ஒப்புக்கொண்டுள்ளது.‘ஒருவர் 10 மணிநேரம் வீடியோ கேம் விளையாடினால், அவர் வேலைவெட்டி இல்லாதவர். தொடர்ச்சியாக குழந்தைகளுக்கான டையப்பர் வாங்கினால், அவர் பொறுப்புள்ள ஓர் அப்பா!’ஐந்தாவது, சக மனிதர்களுடனான உறவு. அவரது ஆன்லைன் நண்பர்கள் யார்? அவர்கள் என்னவெல்லாம் பேசுகின்றனர், எழுதுகின்றனர்? அதற்கு இவர் எப்படி பதில் அளிக்கிறார்? அரசை எதிர்த்து எழுதுகிறாரா? ஆதரிக்கிறாரா? இவற்றைக் கண்காணித்து, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் எப்படி நடைபெறுகிறது? மக்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இணையத்தில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.
சுற்றுலா விசா:
அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, ஒரு தனிநபரின் லட்சணங்கள் அத்தனையையும் பிட்டுப் பிட்டு வைக்கின்றனர் பிக் டேட்டா ஆய்வாளர்கள். இவர்களுக்குத் தெரியாமல் உங்களால் ஒரு ஊசியையோ, பென்சிலையோ கூட வாங்க முடியாது, விற்க முடியாது. பிரச்னை இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதிக புள்ளிகள் இருந்தால் என்ன பயன்? இல்லாவிட்டால் என்ன நஷ்டம்? 600 புள்ளிகளைத் தொட்டால், இணையத்தில் பொருள்கள் வாங்க 5,000 யுவான் (சீன நாணயம்) கடன் கிடைக்கும். 650ஐ தொட்டால், டெபாசிட் கட்டாமல், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும். ஓட்டல்களில் விரைவாக செக்-இன் செய்ய முடியும், பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் வி.ஐ.பி., செக்-இன் வசதி கிடைக்கும்.
666 புள்ளிகளுக்கு மேல் பெற்றுவிட்டாலோ, 50 ஆயிரம் யுவான் ரொக்க கடனே கிடைக்கும். 700 புள்ளிகளுக்கு மேல் என்றாலோ, எந்தவிதமான ஆவணமும் இல்லாமல் சிங்கப்பூர் சுற்றுலா செல்லலாம். 750 புள்ளிகள் என்றால், மதிப்புமிகுந்த ஐரோப்பிய சுற்றுலா செல்வதற்கான விசா பெறுவதில் முன்னுரிமை கிடைக்கும். அதிக புள்ளிகள் பெற்றிருப்பவர்களே அங்கே சூப்பர்ஸ்டார்கள். ஏற்கனவே ஒரு லட்சம் பேர் தாங்கள் பெற்றிருக்கும் அதிகமான புள்ளிகளைக் காட்டி பீற்றிக் கொள்கின்றனர். இவர்களுக்குத்தான் திருமணத்துக்கான பெண்கள் உடனடியாக கிடைக்கின்றனர்.
தடை:
புள்ளிகள் குறைந்துபோனால் என்னாகும்? அவர்கள் அரசுக்கு நம்பகமானவர்கள் இல்லை, நேர்மையானவர்கள் இல்லை. அதனால், இணைய ஸ்பீடு குறைந்துபோகும். ஓட்டலில் தங்கும் அறை சுலபத்தில் முடியாது. வாடகைக்கு இடம் கிடைக்காது. காப்பீட்டையோ, கடனையோ பெற திண்டாட வேண்டும். ஒருசில இடங்களில் வேலை கூட கொடுக்கமாட்டார்கள். தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்காது. ரயில் முன்பதிவு கிடைக்காது. வாடகை கார் கூட கிடைக்காது. அதாவது, அவர்கள் இரண்டாம் தர, மூன்றாம் தர குடிமக்கள்.ஏற்கனவே, சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை என்ற காரணத்தைக் காட்டி, 61.5 லட்சம் பேருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக விமானப்பயணம் மறுக்கப்பட்டதாக, சீனாவின் உச்ச நீதிமன்றம்தெரிவித்தது. அதேபோல், 16.5 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அனுமதி இல்லாமலேயே உலகின் பல முன்னேறிய நாடுகளில், ‘பிக் டேட்டாவை’க் கொண்டு மக்கள் வேவு பார்க்கப்படுகின்றனர். அங்கே சுதந்திரம் வேண்டாம், ‘கீழ்படிதல்’ மட்டுமே வேண்டும். இந்தப் பின்னணியில், நம் நாட்டை யோசித்துப் பாருங்கள். மக்கள்சக்தி, ஜனநாயகத்தில் நாம் வைத்திருக்கும் மதிப்பு புரியும்.
– ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|