பதிவு செய்த நாள்
13 நவ2017
00:06
ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியின், 28 சதவீத அடுக்கிலிருந்த, 178 பொருட்கள், 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதே போல், சிறு வர்த்தகர்களுக்கான, இணக்க (காம்போசிட்) வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. இவையெல்லாம், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன.
உதாரணமாக, ஏன் முதலில், அதிகபட்ச வரி அடுக்கில், இத்தனை பொருட்கள் வைக்கப்பட்டன? இப்போது, அவற்றை ஏன் குறைக்க வேண்டும்? அதே போல், பிற பொருட்களையும், வேறு வேறு அடுக்குகளில் மாற்றி அமைப்பதும், வீண் சிரமம் தானே? இதையெல்லாம் முன்னுணர்ந்து, அரசு திட்டமிட்டு இருக்கலாமே? சரியான வரி அடுக்கில், பொருட்களை பொருத்தி இருக்கலாமே? இத்தகைய கேள்விகளில், நியாயமில்லாமல் இல்லை. ஆனால், ஓர் உண்மையை உணர்ந்து கொண்டு தான் மேலே போக வேண்டும். உலகில், ஜி.எஸ்.டி., அமலில் உள்ள, 160 நாடுகளிலும், இது போல் ஏதோவொரு குறை இருக்கவே செய்தது.
முதலில், ஒருசில பொருட்களை, ஓர் அடுக்கில் வைத்து விட்டு, பின், அதனால் ஏற்படக்கூடிய பல்வேறு சாதக, பாதகங்கள் கண்டறியப்படுகின்றன. வரி அதிகம் இருப்பதால், ஒருசில துறைகளில், உற்பத்தியே முடங்கி போகலாம். அதன் மூலம், வர்த்தகமும், வேலைவாய்ப்புகளும் பறிபோகலாம். வணிகர்களின் தன்னம்பிக்கை நெருக்கடிக்கு உள்ளாகலாம். இவற்றை, முன்னரே கணிக்க முடியாது என்பது தான் யதார்த்தம். ஜி.எஸ்.டி., அமலில் உள்ள நாடுகள் அனைத்தும், படிப்படியாகவே, இத்தகைய வரி சீர்திருத்தங்களை, மாற்றங்களை செய்திருக்கின்றன. ஆனால், ஒரு முக்கிய விஷயம் கவனிக்கத்தக்கது. எவ்வளவு விரைவாக, இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதே கவனத்துக்குரியது. 2017 ஜூலை அமல்படுத்தப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக, ஜி.எஸ்.டி., கவுன்சில், அதன் நடைமுறை சிக்கல்களை அவதானித்து வருகிறது.
வணிகர்கள், சிறு வர்த்தகர்கள், தொழில் துறையினர் ஆகிய அனைவரும் சந்திக்கும் இடர்களையும், சிரமங்களையும் காது கொடுத்துக் கேட்கிறது. உள்நாட்டு உற்பத்தி அளவில், ஜி.எஸ்.டி., ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. மேலும், வரி விகிதங்கள் குறைக்கப்படும் போது, அதன் பலன், பொதுமக்களை போய் சேருகிறதா என, பார்க்கிறது. மாநில நிதி அமைச்சர்களும், மத்திய அரசின் அமைச்சரவை செயலர்களும், அவற்றை கணக்கில் வைத்து, ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும், ஒருசில சலுகைகளையோ, மாறுதல்களையோ, முன்னேற்றங்களையோ செய்கின்றனர்.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது, பொறுப்புணர்வோடும், விரைந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் மாறுதல்களே, இங்கே கவனத்தை ஈர்க்கிறது. இத்தகைய சிரமங்களை, நாம் மட்டுமே சந்திக்கவில்லை. நமக்கு முன், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்திய நாடுகளே, நமக்கு வரலாற்று பாடங்கள். 1991 ஜன., 1ல், கனடாவில், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டது. அங்கே நம்மிடம் இருக்கும், மத்திய, ஜி.எஸ்.டி., – மாநில, ஜி.எஸ்.டி., போன்றே, ஜி.எஸ்.டி., – எச்.எஸ்.டி., என, இரு விகிதங்கள் நடைமுறையில் உள்ளன.இதை, அங்கே அறிமுகப்படுத்திய பிரதமர், பிரெயின் முல்ரோனி என்பவர், அதற்கு முன், அங்கே நடைமுறையில் இருந்த உற்பத்தியாளர் விற்பனை வரி விகிதம், 13.5 சதவீதமாக இருந்தது. இதை மாற்றி அமைத்து, 7 சதவீத, ஜி.எஸ்.டி.,யை அறிமுகப்படுத்தினார். அதற்குள், கனடாவுக்குள் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புகள்.
கடந்த, 1993ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அவரது கட்சியான, பிராகிரசிவ் கன்சர்வேடிவ் பார்ட்டி மண்ணைக் கவ்வியது. முந்தைய தேர்தலில், 169 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்த கட்சி, 1993 தேர்தலில், இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு எதிர்ப்பு; அவ்வளவு வெறுப்பு!
இன்றைக்கும், ஜி.எஸ்.டி., என்றால், முகஞ்சுளிக்காத வணிகர்கள் இல்லை. சொல்லப் போனால், கனடாவில் அடுத்தடுத்து வந்த பிரதமர்கள், ஜி.எஸ்.டி.,யை ஒழித்து விடுவோம் என்ற வாக்குறுதியை கொடுத்தே போட்டி இட்டனர். ஆனால், அவர்களால், அதை ஒழிக்க முடியவில்லை. தவறாக வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என, மன்னிப்பு கேட்டது தான் மிச்சம். அவர்களால், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்கத்தான் முடிந்தது. தற்போது கனடாவில், 5 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. நம் நாட்டில் இருக்கும், ஐ.ஜி.எஸ்.டி., போன்றே, அங்கே இருக்கும் ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,க்கு பெயர், எச்.எஸ்.டி., அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டாலும், தோராயமாக, 15 சதவீதம் வரை உள்ளது.தற்போதும், இதிலிருந்து விலக்குக் கேட்கும் தொழிற்பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுடைய தேவையை மனத்தில் இருத்தி, கனடா அரசு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கவும் செய்கிறது.
அதே போல், ‘ஊபர்’ கார் சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., அல்லது, எச்.எஸ்.டி., விதிக்கப்படும்; அதன் மூலம், பெரும் வரி வருவாய் உருவாகும் என, அந்நாட்டு நிதி அமைச்சர், தன் பட்ஜெட் உரையிலேயே குறிப்பிட்டு உள்ளார். ஆக, ஜி.எஸ்.டி.,க்குள் பொருட்களை, வேறு வேறு விகிதங்களுக்கு மாற்றுவதோ, வரி கட்டமைப்பில் இருந்து முற்றிலும் நீக்குவதோ புதிதல்ல. மேலும், மக்களுக்கு சிரமம் தராமல், அதே சமயம், அரசின் வருவாய் அளவும் குறைந்து விடாமல், சமச்சீரான அளவில் வைத்துக் கொள்வதும் ஒரு கலை.கனடா முன்னாள் பிரதமர், பிரெயின் முல்ரோனி இன்று, தன் முயற்சியைக் கண்டு, தானே மகிழ்ச்சி கொள்கிறார். ‘‘கனடாவின் பொருளாதாரம் வளர, ஜி.எஸ்.டி., உதவி உள்ளது. அரசுக்கு, நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
‘‘தனிநபர் மற்றும் நிறுவன வரிகளை குறைக்கவும், ஜி.எஸ்.டி., உதவி உள்ளதோடு, குறைந்த வருவாய் உள்ள எளிய மக்களுக்கு, வரிச்சலுகைகள் பெறவும் வழி செய்துள்ளது,’’ என, பேசி இருக்கிறார். ஜி.எஸ்.டி., போன்ற மிகப்பெரும் முயற்சிகளை, மிகத் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்துவது சிரமம். ஆனால், குறைகளும், சிக்கல்களும், வருத்தங்களும் தென்படும் போது, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும் முனைப்பும், வேகமும், கூருணர்வும் வேண்டும். ஜி.எஸ்.டி., கவுன்சிலின் சுறுசுறுப்பு, அதைத் தான் வெளிப்படுத்துகிறது.இரு விஷயங்கள் அவசியமானவை. ஜி.எஸ்.டி.,யால் விலைவாசிகள் உயர்ந்துவிடக் கூடாது. அது, பொதுமக்களுக்குச் சிரமம். மறுபக்கம், உற்பத்தியும் பாதித்துவிடக் கூடாது. இதனால், வேலைவாய்ப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்குமே பாதிப்பு. நுகர்வோர் முனையில் தாயாக அரவணைத்து, தொழில் துறையினர் முனையில், தனயனாக அக்கறை காட்டி நெறிப்படுத்துவதன் மூலம், அரசு, ஜி.எஸ்.டி.,யை செம்மையாக நடைமுறைப்படுத்த முடியும்.
– ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|