பதிவு செய்த நாள்
13 நவ2017
00:02
பொருளாதார நிகழ்வுகளும், அறிவிப்புகளும், நம்மை தினமும் தாக்கும் ஒரு கால கட்டத்தில் வாழ்கிறோம். மாற்றங்கள் விரைவுபடுத்தப்படும் இந்நேரத்தில், அவற்றை சரியாக அறிந்தும், புரிந்தும், நம் வாழ்க்கை சார்ந்த முடிவுகளையோ, தொழில் சார்ந்த நடவடிக்கைகளையோ எடுக்க வேண்டிய, அவசர கால கட்டத்தினுள் இருக்கிறோம்.
வேகம், மிக அவசியம். வாய்ப்பை நழுவ விட்டால், அதை பிறர் பறிக்கக் காத்திருக்கும் அவசர போட்டி சூழல். தொழில் வளர்ச்சி சற்றே தொய்வாக தோன்றினாலும், துரித மாற்றங்கள் நிகழும் கால கட்டம். இதன் அடிப்படைக் காரணம், அதிவேக சூழல் மாற்றம். இன்று, தொழில் மற்றும் முதலீடு செய்வோர் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை, நாம் சூழலை தான் ஜெயிக்க முற்படுகிறோம் என்பதே. போட்டியாளரை விட்டுவிட்டு, சூழல் களம் மீது, முழுக் கவனம் செலுத்த வேண்டும். அதுவே, நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டியாளர்கள் சூழலை மறந்தோ அல்லது ஏற்க மறுத்தோ இருந்தால், அதே தவறை நாம் செய்யாமல் இருக்க, சூழல் சார்ந்த ஈடுபாடும், கவனமான நடவடிக்கையும் வித்திடும்.
நம் நாட்டு பொருளாதார எதிர்காலம், சீரான பாதையில் அமைய, விரைவாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அந்த மறுசீரமைப்பு, பல நகர்வுகள் சார்ந்தது. வங்கிகளை வேகமாக மறுசீரமைத்து, மீண்டும் வளர்ச்சிக்கு வழிவகுப்பது, பெரும் சிக்கலில் இருக்கும் பல நிறுவனங்களை, வெளிப்படைத் தன்மையான முறையில், புதிய பாதையில் செலுத்துவது, வரி அமைப்பை மாற்றியமைத்து, மேலும், வரி ஏய்ப்பை ஒழிப்பது, தனியார் முதலீட்டின் வேகத்தை கூட்டுவது, சிறு மற்றும் குறுந்தொழில்களை அமைப்பு சார்ந்த முறைக்குள் கொண்டு வருவது என, இப்படி பல போர்க்கால நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து கொண்டு வர வேண்டிய பணியை, மத்திய அரசு செய்ய முற்பட்டிருக்கிறது.
இந்த சூழலை கடந்து சிந்திப்போர் மட்டுமே, நாளைய வெற்றிக்கு தேவையான நடவடிக்கைகளை, இன்றே எடுக்க முடியும். நாளைய சூழலுக்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகளில், இன்று பங்கேற்போர் மட்டுமே, நாளை வெற்றி அடைவர். நம் நாட்டின் பொருளாதாரம் தோற்றதில்லை. அது திசைமாறினாலும், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி வந்துவிடுகிறது. அதை திசை திருப்பி அழிக்க முற்படும் அரசியல் தான், தொடர்ந்து தோல்வி கண்டிருக்கிறது. இது, தொழில் மற்றும் முதலீடு செய்வோர் கவனம் கொள்ள வேண்டிய, முக்கிய வரலாற்று பாடம்.
நாம் என்ன செய்ய வேண்டும்? முக்கியமாக, இன்றைய செய்திகளில் வரும் முதலீட்டு முடிவுகளால் ஏற்படக்கூடிய, நாளைய மாற்றங்களை தெளிவாக கணிக்க வேண்டும். நேற்றைய தவறுகளை தாண்டி வந்து, நாளைய வாய்ப்பில் எப்படி பங்கேற்கலாம் என, சிந்திக்க வேண்டும். பல நிறுவனங்கள், கடந்த கால தவறுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாளைய வாய்ப்பை நோக்கி வேகமாக நகர துவங்க முற்படுகின்றன. பங்குச் சந்தை பெரு நிறுவனங்கள் இதில் அடக்கம். அவற்றில், நாமும் சிறிது பங்கேற்கலாம் அல்லது நாம் நடத்தும் தொழிலை விரிவாக்கம் செய்து, நாளைய வெற்றிக்கு வித்திடலாம். பழையன கழிதலும் (தவறுகளை நிறுத்திவிட்டு) புதியன புகுதலும் (நேர்பாதையில் செல்லுதல்) மட்டுமே, நாளைய வெற்றிக்கு வித்திடும். கடந்த காலத்தை கடந்து செல்லும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|