பதிவு செய்த நாள்
17 நவ2017
00:13
மும்பை : நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள், அதிகாரபூர்வமாக வெளி வருவதற்கு சில நாட்கள் முன்பாகவே, ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் கசிவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, பங்கு வர்த்தகத்தில் ஆதாயம் ஈட்டுவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்களின், ‘உள்குத்து’ வேலையாக இருக்குமோ என, சந்தேகம் எழுந்துள்ளது.
சரிவு:
செய்தி நிறுவனமான, ‘தாம்சன் ராய்ட்டர்ஸ்’ மேற்கொண்ட ஆய்வில், இந்த தகிடுதத்தம் தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரேட்டரிஸ் நிறுவனத்தின், ஏப்., – ஜூன் வரையிலான, காலாண்டு நிதி நிலவரம் குறித்த கணிப்பை வெளியிட்டிருந்தது. அதில், ரெட்டீஸ் லேப்., 300 கோடி ரூபாய் லாபமீட்ட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூலை, 24ல், ‘மார்க்கெட் சாட்டர்’ என்ற, ‘வாட்ஸ் ஆப்’ குழுவில், ‘டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனம், 50 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வாய்ப்பு உள்ளது’ என, தகவல் வெளியானது. அதே போல, மூன்று நாட்கள் கழித்து, ஜூலை, 27ல், ரெட்டீஸ் லேப்., வெளியிட்ட முதல் காலாண்டு நிதிநிலை அறிக்கையில், 58.70 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இது, சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்ததால், அன்று, அந்நிறுவனத்தின் பங்கு விலை, 4.4 சதவீதம் சரிவடைந்தது.
மறுப்பு:
இது போல, 12 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், வெளி வருவதற்கு முன்பாகவே, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களில், அது குறித்த, சரியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, அந்நிறுவனங்களின் பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டுபிடித்த ராய்ட்டர்ஸ் நிறுவனம், ‘மார்க்கெட் சாட்டர்’ குழுவில், தகவல் வெளியிட்ட மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டது.
எதிர்முனையில், நிஷாந்த் வாஸ் என, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், ‘தான் அவ்வாறு எந்த தகவலையும் வெளியிடவில்லை’ என, மறுத்து விட்டார். பின், அதே எண்ணில் தொடர்பு கொண்டு, ‘நிறுவன தகவலை முன்கூட்டியே வெளியிட்டதாக கூறுவது, ஆதாரமற்றது’ என, தெரிவித்து உள்ளார். அவர், பங்குத்தரகு சேவையில் ஈடுபடும், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் என்பது தெரிய வந்துள்ளது. இது போல, மேலும் சில, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களில், தகவல் பரிமாறப்பட்டு உள்ளது.
‘பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, ஒரு நிறுவனத்தின் நிதி நிலவரத்தை, முன்கூட்டியே கசிய விட்டு, ஆதாயம் காணுவது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ விதிமுறைகளின்படி குற்றமாகும். ‘இதற்கு, 25 கோடி ரூபாய் வரை, அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க இடம் உள்ளது’ என, பங்கு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
விளக்கம்:
பங்கு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, அதிகாரபூர்வமற்ற எந்தவொரு அறிக்கையையும் நிறுவனம் வெளியிடுவதில்லை. நிறுவனங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாதுகாக்க, வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|