பதிவு செய்த நாள்
28 நவ2017
23:51
புதுடில்லி : பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், வங்கியில், தலா, 25 லட்சம் ரூபாய்க்கு மேல், ‘டிபாசிட்’ செய்து, கணக்கு தாக்கல் செய்யாத, 1.16 லட்சம் பேருக்கு, வருமான வரித்துறை, ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், சுஷில் சந்திரா கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், 1.16 லட்சம் பேர், தலா, 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில், ‘டிபாசிட்’ செய்துள்ளனர். அவர்கள் இன்னும் வருவாய் விபரங்களை அளிக்காததால், 30 நாட்களில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்படி, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டு உள்ளது.
அடுத்து, 10 – 25 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து, கணக்கு தாக்கல் செய்யாமல் உள்ள, 2.40 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வருமான வரி சட்டத்தை மீறியது தொடர்பாக, ஏப்., – செப்., வரை, 609 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 288 ஆக இருந்தது. இதே காலத்தில், புகார்களின் எண்ணிக்கை, 652லிருந்து, 1,046 ஆகவும், தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 13லிருந்து, 43 ஆகவும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2016 நவ., 8ல், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 23.22 லட்சம் வங்கிக் கணக்குகளில் செய்த டிபாசிட் குறித்து, வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அதில், சந்தேகத்திற்கு இடமான, 17.73 லட்சம் கணக்குகளில், தலா, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், மொத்தம், 3.68 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் செய்தது தெரிய வந்துள்ளது. அவற்றில், 16.92 லட்சம் வங்கிக் கணக்குகளில் செய்த டிபாசிட் விபரங்களை, 11.8 லட்சம் பேர் வருமான வரித்துறை இடம் அளித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|