பதிவு செய்த நாள்
23 டிச2017
03:37
புதுடில்லி : ‘‘எந்தவொரு பொதுத் துறை வங்கியையும் மூடும் திட்டம் இல்லை’’ என, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன.
கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில், சரிவர செயல்படாத பொதுத்துறை வங்கிகள் சிலவற்றை மூட உள்ளதாகவும், 15 வங்கிகள், 5 பெரிய வங்கிகளின் கீழ் ஒன்றிணைய உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால், வங்கியில், ‘டிபாசிட்’ செய்துள்ளோர் பீதியடைந்து, தங்கள் கிளைகளை அணுகி விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை வங்கிகள் சிலவற்றை மூட உள்ளதாக சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையல்ல. வெறும் வதந்தி. ரிசர்வ் வங்கி, ஒரு சில வங்கிகளை, ‘பி.சி.ஏ.,’ பட்டியலில் இணைத்துள்ளது. இதன் மூலம், இவ்வங்கிகள், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இவ்வங்கிகளின் சொத்து மதிப்பு சரிவடையாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
குறிப்பிட்ட வங்கிகள், அவற்றின் செயல்பாடுகளை சீரமைத்து, வாராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை நிலை நிறுத்தும் நோக்கில், இந்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த, 2002 முதல் அமலில் உள்ள, ‘பி.சி.ஏ.,’ வழிகாட்டு நடைமுறை, ஏப்ரலில் திருத்தியமைக்கப்பட்டது. இது, பொதுமக்களின் வழக்கமான வங்கி நடைமுறைகளை கட்டுப்படுத்த, கொண்டு வரப்பட்ட நடைமுறை அல்ல. ஆகவே, வங்கி மூடல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய நிதிச் சேவைகள் செயலர் ராஜீவ் குமார் கூறியதாவது: எந்த வங்கியையும் மூடும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்தவே, 2.11 லட்சம் கோடி ரூபாய்க்கு மறு பங்கு மூலதன திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதனால், வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் துறை வங்கிகளை சீரமைக்கும் திட்டம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.17,000 கோடி இழப்பு:
கடந்த, 2016 –17ம் நிதியாண்டில், பல்வேறு மோசடிகளால், வங்கிகளுக்கு, 16,789 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில், வங்கிகள், 65.30 கோடி ரூபாய் இழப்பை கண்டுள்ளன. இது, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 18.48 கோடி ரூபாயாக உள்ளது. கணினி வாயிலான மோசடிகளை தடுக்க, ரிசர்வ் வங்கி, ‘சைபர்’ பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளது.
சிவ் பிரதாப் சுக்லா, நிதித் துறை இணை அமைச்சர்
பிரத்யேக கண்காணிப்பு:
ரிசர்வ் வங்கி, பொதுத் துறையைச் சேர்ந்த, பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க் ஆகியவற்றை, பிரத்யேக கண்காணிப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இவ்வங்கிகள், சுதாரித்துக் கொண்டு, வர்த்தகத்தை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகல் கரன்சி:
சமீபத்தில், ஒரே வரிசை எண் உள்ளதாக பறிமுதல் செய்யப்பட்ட உயர் மதிப்பு கரன்சிகள், ‘ஸ்கேன்’ செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டவையாகும்
-பி.ராதாகிருஷ்ணன், நிதித் துறை இணை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|