பதிவு செய்த நாள்
26 டிச2017
00:32
புதுடில்லி : நடப்பாண்டு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, வங்கிகளில், ‘டிபாசிட்’ அதிகரித்துள்ளது. அதனால் வங்கிகள், டிபாசிட் மீதான வட்டியை குறைத்து வருகின்றன. தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகள் மீதான வருவாயும் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையின் எழுச்சி காரணமாக, பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இவ்வகை முதலீட்டிற்கு, நுணுக்கமான ஆய்வு அவசியம் என்பதால், புதிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, மியூச்சுவல் பண்டு திட்டங்களில், ஆர்வமுடன் முதலீடு செய்கின்றனர்.
பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில், முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டு திட்டங்கள், இடர்ப்பாடு குறைவான, அதே சமயம், நியாயமான வருவாயை அளிக்கக் கூடியவையாக உள்ளன. ‘செபி’யின் சீர்திருத்த நடவடிக்கைகள், மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வு பிரசாரங்கள், மொபைல் போன் மூலம் முதலீடு செய்யும் வசதி, கிராமப்புறங்களில் பரவலாகி வரும் இணைய தொடர்பு போன்றவை, மியூச்சுவல் பண்டு துறை வேகமாக வளர்ச்சி காண துணை புரிந்துள்ளன.
இதனால், நடப்பாண்டு, ஜன., – நவ., வரை, 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, மியூசுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சாதனை அளவாக, 23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2016 டிச., நிலவரப்படி, 16.46 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்தாண்டு மட்டும், 1.70 கோடி முதலீட்டாளர்கள், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து உள்ளனர். இதன் மூலம், மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, 6.50 கோடியாக உயர்ந்து உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், நிதிச் சந்தையில், ரிசர்வ் வங்கி, ‘செபி’ மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் போன்றவற்றால், புத்தாண்டில், மியூச்சுவல் பண்டு துறை மேலும் வளர்ச்சி காணும் என, நிதி வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சொத்து மதிப்பில் சாதனை:
இந்தியாவில் உள்ள, 42 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, இந்தாண்டில், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த, ஐந்து ஆண்டுகளை விட, இது, 24 சதவீதம் அதிகமாகும். 2014 மே மாதம், முதன்முறையாக, மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இது, மூன்றரை ஆண்டுகளில், இந்தாண்டு நவம்பர் இறுதியில், சாதனை அளவாக, 23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|