பதிவு செய்த நாள்
06 பிப்2018
20:16
புதுடில்லி : ‘‘பிரதமர் நரேந்திர மோடியின், ஐக்கிய அரபு எமிரேட்சின் சுற்றுப்பயணத்தின் போது, 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன,’’ என, இந்தியாவுக்கான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதர், அஹமது அல் பன்னா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: பிரதமர் மோடி, 10ல், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே, நிதி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில், 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மேலும், துாதரக உறவு, பொருளாதாரம், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக, பேச்சு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில், வரும், 10, 11ல், ஆறாவது உலக அரசு மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்களிடையே சிறப்புரை ஆற்றுகிறார். இரு நாடுகளின் உறவுக்கு, முக்கியத்துவம் தரும் வகையில், இந்த பயணம் அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, 2015 ஆகஸ்டில், முதன்முறையாக, பிரதமர் மோடி சென்றார். தற்போது, இரண்டாவது முறையாக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|