பதிவு செய்த நாள்
31 மார்2018
01:11
சென்னை: பாரிமுனை மலர் அங்காடிகளில், மல்லி விலை குறைந்தும், ரோஜா அதிகரித்தும் விற்பனையானது. சென்னைக்கு, ஆந்திர மாநிலம் மற்றும் புறநகர்களில் இருந்து மல்லி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மல்லி விலை, 1 கிலோ, 240 ரூபாயாக குறைந்துள்ளது.வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், விலை இன்னும் குறையும். ரோஜா வகைகள், 1 கிலோ, 120 ரூபாயிலிருந்து, 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. சாமந்தி வரத்து குறைந்து இருப்பதால், 1 கிலோ, 160 ரூபாயாக உள்ளது. கும்கி சாமந்தி வரத்து துவங்கியுள்ளது. இதன் விலை, சில்லரை விற்பனையில் கால் கிலோ, 40 – 50 ரூபாயாக உள்ளது.
சூடுபிடிக்கும் பனைவெல்ல வியாபாரம்
சென்னை: சென்னை புறநகர் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் பனைவெல்லம் விற்பனை சூடுபிடித்துள்ளது. துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் பனைவெல்லம், சுக்குவெல்லம் உள்ளிட்டவை, சென்னை புறநகர், நெடுஞ்சாலை ஓரங்களில் விற்கப்படுகின்றன.
இது குறித்து துாத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரி, வடிவு கூறியதாவது: துாத்துக்குடியில் இருந்து பனை தயாரிப்புகளை, வேனில் நாங்களே கொண்டு வந்து சென்னையில் விற்கிறோம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, இஞ்சி, கருப்பட்டி, மிளகு போட்டு தயாரிக்கும் சுக்குவெல்லம் அனைத்தையும் நாங்களே தயாரித்து மக்களுக்கு நேரடியாக விற்கிறோம். வெயில் சீசனுக்கு, பனை தயாரிப்பு மிகவும் ஏற்றது. வைகாசி வரை சீசன் இருக்கும். விலை குறைவாகவும் கிடைக்கும். பனைவெல்லம் ஒரு கிலோ, 140 ரூபாய்க்கும், சுக்குவெல்லம் ஒரு கிலோ, 200 – 220 ரூபாய்க்கும், பனங்கற்கண்டு ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
சக்க போடு போடும் நாட்டு மருந்து விற்பனை
சென்னை: உடல் இளைக்க, லேகியம் சாப்பிட்டவர் இறந்த செய்தி ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் நாட்டு மருந்தகங்களில் விற்பனை சூடு பிடித்து உள்ளது.சென்னையில் பாரிமுனை மட்டுமின்றி நகருக்கு ஒன்றிரண்டு நாட்டு மருந்து விற்பனையகங்கள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக விற்கப்படும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உலர் பழங்கள், செம்பருத்தி, கடுக்காய், திப்பிலி, சூரணம், லேகியம் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.பாரிமுனை மொத்த விற்பனை நாட்டு மருந்தகங்களில், ஒரு நாளுக்கு, 60ஆயிரம் – 1 லட்சம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனையாகின்றன. சில்லரை விற்பனையகங்களில், 10ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை பொருட்கள் விற்பனையாகின்றன.கோடை அதிகரிக்கும் தற்போதைய சூழலில், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது.இது குறித்து, பாரிமுனை நாட்டு மருந்தக வியாபாரி பாலாஜி கூறியதாவது:75 ஆண்டுகளாக நாட்டு மருத்துவ பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவன தயாரிப்புகளையே நாங்கள் விற்கிறோம்.சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்ற நோய்களுக்கு, நாட்டு மருத்துவ தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகும்.அஷ்வகந்த லேகியம், மதனகாமேஸ்வர லேகியம், ஓரிதழ் தாமரை, நீலிபிருங்காதி தைலம், திப்பிலி, உலர் பழங்கள் உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகும் பொருட்களில் சில.இவை தர்மபுரி, ஈரோடு, தோவாளை போன்ற பகுதிகளிலிருந்து வருகின்றன. சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்புக்கு நாட்டு மருத்துவத்தையே பலர் நம்பியுள்ளனர்.பதிவு பெற்ற நிறுவன தயாரிப்புகளை காலாவதி தேதி பார்த்து பயன்படுத்துவது பாதுகாப்பானது. நாட்டு மருத்துவத்தை பொறுத்தவரை தவறாக பயன்படுத்தினால் வயிற்றுவலி, வாந்தி, பேதி அல்லது தோல் பிரச்னை போன்றவையே ஏற்படும். உயிர்பலிக்கு லேகியம் மட்டுமே காரணமாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்றம் பெறும் காய்கறிகள்
சென்னை: பீன்ஸ், பீட்ரூட், புடலை உள்ளிட்ட காய்கறி விலை மெல்ல ஏறத் துவங்கியுள்ளன.கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பீட்ரூட், பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மெல்ல விலை ஏறத் துவங்கியுள்ளன. பட்டாணி, 60 – 75 ரூபாயாகவும், பீன்ஸ், 1 கிலோ, 25 – 30 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அவரை நேற்றைய விலையில் இருந்து, 5 ரூபாய் அதிகரித்து, 1 கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலிபிளவர், 20 – 25 ரூபாய் வரை உள்ளது. வெயில் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், காய்கறிகள் விலை மெல்ல உயரும் என, வியாபாரிகள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|