பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:16
புதுடில்லி:‘எத்தகைய இடர்ப்பாடுகளையும் சமாளிக்கும் வகையில், இந்திய வங்கிகளின் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும்’ என, அமெரிக்க தர நிர்ணய நிறுவனமான, எஸ் அண்டு பி தெரிவித்துள்ளது.
வாராக் கடனை குறைத்து காட்டியதாக, ஆக்சிஸ் வங்கிக்கு, ரிசர்வ் வங்கி, 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மேலும், வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஷிகா ஷர்மாவின் பதவி நீட்டிப்புக்கும் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தது.
பணி நீட்டிப்பு
இதையடுத்து, ஷிகா ஷர்மாவுக்கு, இந்தாண்டு டிசம்பர் வரையிலாவது பணி நீட்டிப்பு வழங்குமாறு, அவ்வங்கியின் இயக்குனர் குழு, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில், வீடியோகான் நிறுவனத்திற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கடன் வழங்கியதில், அவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் ஆதாயம் பெற்றது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
மதிப்பு சீர்குலையும்
இந்த பிரச்னைகள் தொடர்பாக, எஸ் அண்டு பி வெளியிட்டுள்ள அறிக்கை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இயக்குனர் குழு, வங்கி தலைமை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.எனினும், குற்றச்சாட்டு உறுதியானால், வங்கியின் மதிப்பு சீர்குலையும்; சட்டம் மற்றும் நிதிப் பிரச்னைகளை, வங்கி சந்திக்க நேரும். இந்திய வங்கித் துறையின் நிர்வாகமும், வெளிப்படை தன்மையும், எதிர்மறை அம்சங்களை கொண்டுள்ளன.
வங்கிகளின் மதிப்பு, இடர்ப்பாடுகளை சமாளிக்கும் திறன், நிதி வளம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும்.இடர்ப்பாடுகளை நிர்வகிக்கும் ஆற்றல், ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளுக்கு சமமாக உள்ளது. இருந்தபோதிலும், எச்.டி.எப்.சி., வங்கியை விட, ஆக்சிஸ் வங்கி சற்று பலவீனமாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|