பதிவு செய்த நாள்
22 ஏப்2018
01:59
மும்பை: ‘‘ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும், எல்.ஓ.யு., எனப்படும், கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, விரைவில் வங்கிகளுடன் பேச்சு நடத்தப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோர், போலி, எல்.ஓ.யு., ஆவணங்கள் மூலம், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, எல்.ஓ.யு., நடைமுறையை ரத்து செய்தது. இதனால், சிறிய ஏற்றுமதியாளர்கள், கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம், குறைந்த வட்டியில் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது, ஏற்றுமதியாளர்களின் நடைமுறை மூலதனச் செலவை அதிகரித்திருப்பதுடன், நிதி நெருக்கடியையும் உண்டாக்கியுள்ளது.இதனால், ‘கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறைக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்’ என, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, மும்பையில் நடைபெற்ற, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பில், அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:விரைவில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூட்டம், கூட்டப்படும். அதில், கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையை ரத்து செய்ததால், ஏற்றுமதியாளர்களுக்கு நேர்ந்துள்ள பாதிப்பு குறித்து எடுத்துரைத்து, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.கடந்த காலங்களில், வங்கிகள், ஏற்றுமதியாளர்களுக்கு போதிய அளவு கடன் வழங்கி வந்தன. தற்போதைய சூழலில், கடன் பெறுவது சிரமமாகியுள்ளது. ‘மிகவும் முன்னுரிமை துறை’ எனக் கருதி, ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.ஏற்றுமதியை அதிகரிக்க, புதிய சந்தைகளை அடையாளம் கண்டு, களமிறங்க வேண்டும். முதன் முறையாக, வெளிநாடுகளில், வர்த்தக சேவை உதவி மையங்களை திறக்க, அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்தில், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை புகுத்த, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி., வரியை திரும்பப் பெறுவதில், வணிகர்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக, விரைவில் மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.உலக வர்த்தக கூட்டமைப்பின் விதிமுறைகளை, இந்தியா பின்பற்றி வருகிறது. அதையொட்டியே நமது வர்த்தக கொள்கை நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதை குற்றம் சொன்ன நாடுகள், தற்போதைய அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டு அஞ்சி, ‘உலக வர்த்தக அமைப்பை காக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.‘எனக்கு மகிழ்ச்சியில்லை’பல ஆண்டுகளுக்கு பின், ஏற்றுமதி, 2017-– 18ம் நிதியாண்டில், 9 சதவீதத்தை தாண்டி, 30,200 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எனினும், இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்கு, தெளிவான நிலைப்பாட்டு கொள்கையை முதலில் உருவாக்க வேண்டும்.சுரேஷ் பிரபு, மத்திய வர்த்தகம்,தொழில் துறை அமைச்சர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|