பதிவு செய்த நாள்
07 மே2018
00:38
பொதுவாக பலரும் செய்யும் நிதித்தவறுகளை அறிந்து, அவற்றை தவிர்ப்பதன் மூலம் இலக்குகளை நோக்கி முன்னேறலாம்.
வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கிய பின், வாழ்க்கையில் உற்சாகமாக உணரலாம். புதிதாக கிடைத்துள்ள நிதி சுதந்திரம் ஊக்கமாக இருந்தாலும், கூடவே பொறுப்புகளும் இருக்கும். பணத்தை கையாள்வது தொடர்பான புதிய பொறுப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணத்தை கையாள்வது என்று வரும் போது, செலவுகள் மட்டும் அல்ல, சேமிப்பு மற்றும் முதலீடுகளை நிர்வகிப்பதும் இதில் அடங்கும்.
பெரும்பாலானவர்கள் பணத்தை நிர்வகிப்பதில் தங்களை அறியாமல் பலவித தவறுகளை செய்கின்றனர். போதிய அளவு சேமிக்காமல் இஷ்டம் போல செலவு செய்வது உள்ளிட்ட தவறுகள் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நிதி எதிர்காலத்தையும் பாதிக்கலாம். எனவே இத்தகைய தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது.
தவறான முதலீடு
உரிய நேரத்தில் முதலீடு செய்யத்துவங்காமல் இருப்பது தவறு என்றால், தவறான நிதி சாதனங்களில் முதலீடு செய்வது அதைவிட பெரிய தவறாக அமைகிறது. பலரும் நிதி சாதனங்களை சரியாக புரிந்து கொள்ளாமலே முதலீடு செய்கின்றனர். முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யும் முன் அவை தரும் பலன்கள், அவற்றுக்கான, ‘ரிஸ்க்’ தன்மை ஆகியவற்றை அறிந்திருப்பதுடன், அவை நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
காப்பீடு பாதுகாப்பு முக்கியம். ஆனால் காப்பீட்டுடன் முதலீட்டையும் இணைப்பது தவறாகும். இதன் மூலம் குறைந்த காப்பீடு பாதுகாப்பிற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கலாம்.இது போன்ற தவறுகளை செய்திருந்தால் உடனடியாக அவற்றை சரி செய்ய வேண்டும்.
கைவசம் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலித்து அவற்றில் தவறானவற்றை கைவிட வேண்டும். தேவையில்லாத நிதி சாதனங்களை தொடர்ந்து பராமரிப்பது மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும்.முதலீட்டு முடிவுகளை தகுந்த நிதி ஆலோசனை அடிப்படையில் தான் மேற்கொள்ள வேண்டும். ஆனால் பலரும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் செயல்படும் வழக்கம் கொண்டுள்ளனர். இவை தவறான ஆலோசனையாக அமையலாம்.
மற்றவர்கள் சொல்வதை கேட்டு அல்லது செய்வதை பார்த்து செயல்படுவதை தவிர்த்து முறையான ஆலோசனை பெற்று அதனடிப்படையில் முதலீடு செய்வது உள்ளிட்ட நிதி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதே போல காப்பீடு என வரும் போது, பெரும்பாலானோர் ஏஜன்ட்களின் பரிந்துரை படி செயல்படுகின்றனர். ஒருவர் தனக்கு எந்த அளவு காப்பீடு தேவை என்பதை பரிசீலித்து அதற்கேற்ற பாலிசியை வாங்க வேண்டும்.
தாமதம் வேண்டாம்
அவசியமான நிதி முடிவுகள் என்று அறிந்திருந்தும் கூட, அவற்றை உடனடியாக செயல்படுத்தாமல் தள்ளிப்போட்டு வருவது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. போதிய வருமானம் இல்லை, செலவுகள் அதிகமாக இருக்கிறது என, பலவித காரணங்களை இதற்கு கூறிக்கொள்கின்றனர். ஓய்வூதியத்திற்கான சேமிப்பை துவக்க அவசரம் இல்லை என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. எனினும், ஓய்வு கால திட்டமிடலை தள்ளிப்போடுவது எதிர்காலத்திற்கான பலனை வெகுவாக குறைத்துவிடும்.
அது மட்டும் அல்லாமல் இளம் வயதிலேயே ஓய்வு கால சேமிப்பை துவக்கினால், அதிக கால முதலீடு மற்றும் கூட்டு வட்டியின் பலனை இணைந்து பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|