பதிவு செய்த நாள்
19 மே2018
01:43
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி மதிப்பு அதிகமாக இருந்தால், நடப்பு கணக்கில் பற்றாக்குறை உண்டாகும். இதனால், ஏற்றுமதி மூலம் ஒரு நாடு பெறும் வருவாயை விட, இறக்குமதிக்காக, வெளிநாடுகளுக்கு அதிக தொகை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அமெரிக்கா:
இது குறித்து, சர்வதேச நிதிச் சேவைகள் நிறுவனமான, ‘கோல்டுமென் சாக்ஸ்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஒரு பேரல் கச்சா எண்ணெய், 80 டாலரை எட்டியுள்ளது. 2014, நவம்பருக்கு பின், இந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஈரான் உடனான, அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா வெளியேறியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை, வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால், பணவீக்கம் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை, 10 சதவீதம் உயர்ந்தால், பணவீக்கம், 0.10 சதவீதம் உயரும்.
இத்தகைய அம்சங்களின் அடிப்படையில், 2018- – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, முந்தைய மதிப்பீட்டை விட, 0.3 சதவீதம் அதிகரித்து, 2.1 சதவீதத்தில் இருந்து, 2.4 சதவீதமாக உயரும்.
ரூபாய் மதிப்பு:
கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், அக்., – டிச., வரையிலான காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2 சதவீதமாக, அதாவது, 1,350 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. இது, 2016 – -17ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 800 கோடி டாலராக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் சில்லரை பணவீக்கம், சராசரியாக, 5.3 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஓராண்டில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 6.6 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், நடப்பு கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனினும், ரிசர்வ் வங்கி, ஜூன், 6ல் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது; ஆகஸ்டில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 டாலர் உயர்ந்தால் :
இந்தியாவின், கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம், இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், 40 சதவீத பங்கை கொண்டுள்ளன.
கடந்த நிதியாண்டில், ஏப்., – பிப்ரவரி வரை, 6,350 கோடி டாலர் மதிப்பில், 19.57 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் இறக்குமதியான, 1 பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை, 55.74 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதியை பொறுத்தவரை, 1 பேரலுக்கு, 1 டாலர் உயர்ந்தால் கூட, இறக்குமதி செலவினத்தில், 823 கோடி ரூபாய் உயரும். தற்போது, 1 பேரல் இறக்குமதி கச்சா எண்ணெயின் சராசரி விலை, 72 டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|