பதிவு செய்த நாள்
20 மே2018
02:17
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வால், சாண எரிவாயு திட்டத்தை செயல்படுத்துவதில், சேலம் மாவட்ட கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபகாலமாக, ‘காஸ்’ சிலிண்டர் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. மாற்று எரிபொருளான மண்ணெண்ணெயும், நியாய விலை கடைகளில் குறைந்த அளவிற்கே வழங்கப்படுகிறது. விறகு விலையும் உச்சத்திற்கு சென்று விட்டது. மின்சார அடுப்பை பயன்படுத்த முடியாத அளவிற்கு, கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இந்த சிக்கலை சமாளிக்க உதவும் வகையில், 1981 – 82ல், மத்திய அரசின், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சாண எரிவாயு திட்டம் தற்போது, புத்துயிர் பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், கிராம மக்கள், சாண எரிவாயுவை பயன்படுத்த துவங்கி உள்ளனர்.இது குறித்து, அம்மம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:கடந்த, 1986 – 87ல், 40 ஆயிரம் ரூபாய் செலவில், சாண எரிவாயு கலன் அமைத்தேன். அரசு மானியமாக, 3,000 ரூபாய் கொடுத்தது.சாண எரிவாயு கலனிலிருந்து வெளியேறும் கழிவு, சிறந்த உரமாக பயன்படுகிறது. சில ஆண்டுகளாக இவற்றை பயன்படுத்தாமல் விட்டதால், ஆண்டுக்கு, 6,000 முதல், 9,000 ரூபாய் வரை, காஸ் சிலிண்டர் வாங்கி வந்தேன்.தற்போது, சாண எரிவாயு பயன்படுத்துவதால், அந்த செலவு மீதமாகிறது. இந்த சாண எரிவாயு கலனில் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், கிராமப்புற மக்கள், இந்த கலன் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 16 ஆயிரம் சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஸ் சிலிண்டர் வருகைக்கு பின், சாண எரிவாயு பயன்பாடு குறைந்துவிட்டது.சாண எரிவாயு கலன் அமைக்க, தேசிய கரிம எரிவாயு மற்றும் இயற்கை உரம் மேலாண்மை திட்டத்தின் கீழ், அரசு மானியம் வழங்கப்படுகிறது.மூன்று முதல், நான்கு மாடுகள் வைத்துள்ள விவசாயிகள், இத்திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|