பதிவு செய்த நாள்
26 மே2018
00:31
‘இன்ஜினியரிங்’ தொழில் தொடர்பான பொருள்களை, மாநிலத்துக்குள் கொண்டு செல்லும்போது, ‘இ–வே பில்’ விதிக்க கூடாது’ என, சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சங்க தலைவர், பாபு மற்றும் பொதுச் செயலர் மோகன் கூறியதாவது: மாநிலங்களுக்கிடையே பொருள்களை கொண்டு செல்ல, இ – வே பில் பெறும் முறையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், மாநிலத்துக்குள் பொருள்களை கொண்டு செல்ல, இ – வே பில் பெற வேண்டும் என்ற முறை, எங்களைப் போன்ற சிறிய நிறுவனங்களை மிகவும் பாதிக்கும். எங்களது, இன்ஜினியரிங் தொழில் என்பது, ஒரே நேரத்தில் ஒரு பொருளை உற்பத்தி செய்து முடிப்பது இல்லை. ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் கருவிகளை எடுத்துச் செல்ல வேண்டும்.அதற்கு, ஒவ்வொரு முறையும், எங்களால் இ – வே பில் பெற முடியாது. எங்களைப் போன்ற சிறிய நிறுவனங்களில், கணினி வசதி கூட கிடையாது. எவ்வாறு இ – வே பில் எடுக்க வேண்டும் என்பது குறித்தும், எங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை.உற்பத்தி செய்து, முழுமையடைந்த பொருள்களை, எடுத்துச் செல்ல இ – வே பில் பெற அனுமதிக்கலாம். ஆனால், இன்ஜினியரிங் தொழிலில் ஈடுபட்டுள்ள, சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் இ – வே பில் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்துக்குள், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு மட்டுமே, இ – வே பில் விதிக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், 50 ஆயிரத்துக்கு மேல் பொருள்களை எடுத்துச் செல்ல வாய்ப்பு குறைவு தான். ஆனால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் கொண்டு சென்றால் கண்டிப்பாக இ – வே பில் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|