பதிவு செய்த நாள்
10 ஜூன்2018
01:08
புதுடில்லி:சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, வெளிப்படையாக தகவல்களை தராத நிறுவனங்களில் இருந்து, அவற்றின், ‘ஆடிட்டர்’கள் வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது.
ஆண்டு நிதிநிலை அறிக்கையை மிகைப்படுத்தி காட்டி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை கட்டுப்படுத்த, புதிய நிறுவனங்கள் சட்ட திருத்தம் வகை செய்கிறது.ஒரு நிறுவனம், நிதிநிலை அறிக்கையில் முறைகேடு செய்தது தெரியவந்தால், அதன் கணக்கை தணிக்கை செய்யும் ஆடிட்டரையும் பொறுப்பாளி ஆக்குகிறது இந்த சட்டம்.
நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும், அதன் இயக்குனர் குழு மட்டுமின்றி, கணக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனமும் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என, இந்த சட்டம் கூறுகிறது.நிறுவனத்தின் உண்மை நிலவரங்களை வேண்டுமென்றே மறைத்து, கடன்தாரர்கள், பங்கு முதலீட்டாளர்கள், வரித் துறை அதிகாரிகளை ஏமாற்றியதாக, இச்சட்டத்தின் கீழ், ஆடிட்டர்களுக்கு, அபராதமுடன், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
இதன் காரணமாக, ஆடிட்டர்கள், நிறுவனங்களிடம் வெளிப்படையான தகவல்களை எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர்.அவ்வாறு இல்லாமல், கணக்கு தணிக்கைக்கு போதுமான தகவல்களை தர மறுக்கிற நிறுவனங்களில் இருந்து, பின்னாளில் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரும் என்ற அச்சத்தில், ஆடிட்டர்கள் வெளியேறுகின்றனர்.
சமீபத்தில், ‘மன்பசந்த் பிவரேஜஸ், வக்ரங்கி, ஜெட் ஏர்வேஸ், எல் அண்டு டி’ நிறுவனத்தின் கப்பல் பிரிவு, ‘அட்லாண்டா’ உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருந்து, ஆடிட்டர்கள் வெளியேறியுள்ளனர்.‘வக்ரங்கி நிறுவனம், இயக்குனர் தேர்வு நடைமுறைகள் தொடர்பானஆவணங்கள், தங்கம் மற்றும் ஆபரண வர்த்தக விபரங்கள் ஆகியவை குறித்து, போதுமான தகவல்களை தெரிவிக்கவில்லை’ என, தெரிவித்து, அதன் கணக்கு தணிக்கையில் இருந்து, ‘பிரைஸ் வாட்டர்கூப்பர்ஸ்’ நிறுவனம்விலகியுள்ளது.
இதே தணிக்கை நிறுவனம், தனி இயக்குனரின் ராஜினாமா மற்றும் வருமான வரித் துறை விசாரணை விபரங்களை தெரிவிக்கவில்லை என்பதால், அட்லாண்டா நிறுவனத்தில் இருந்தும் வெளியேறி யுள்ளது.‘மன்பசந்த் பிவரேஜஸ் நிறுவனம் போதுமான தகவல்களை தரவில்லை’ என, கணக்கு தணிக்கை ஒப்பந்தத்தை. ‘டிலோட்டி ஹஸ்கின்ஸ் அண்டு செல்ஸ்’ நிறுவனம் முறித்துக் கொண்டது.
நேற்று முன்தினம், ‘ஐநாக்ஸ் விண்டு’ நிறுவனத்தின் கணக்கு தணிக்கையில் இருந்து விலகுவதாக, ‘பதன்கர் அண்டு அசோசியேட்ஸ்’ தெரிவித்துள்ளது.ஆடிட்டர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம், நிறுவனங்களிடம் அதிக வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி, ஒழுங்குமுறையை கொண்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யம் முதல் கீதாஞ்சலி வரை...
ராமலிங்க ராஜுவின், ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ முதல், சமீபத்திய மெகுல் சோக்ஸியின், ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ வரையிலான அனைத்து மோசடிகளும், அவற்றின் மிகைப்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அடிப்படையிலேயே நடந்துள்ளன.சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு தொடர்பாக, அதன் கணக்கை தணிக்கை செய்த, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனத்திற்கு, ‘செபி’ இரண்டாண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|